நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2589
Zoom In NormalZoom Out


 

காலமும் இடனுங் கூறுகின்றது.

(இ-ள்.)   குறியெனப்  படுவது  -  குறியென்று  சொல்லப்படுவது;
இரவினும்  பகலினும்  -  இரவின்கண்ணும் பகலின்  கண்ணும்; அறியத்
தோன்றும்   ஆற்றது    என்ப   -  தலைவனுந்  தலைவியுந்  தானும்
அறியும்படி தோன்றும் நெறியையுடைய இடம் எ-று.

நெறியென்றார்     அவன்  வருதற்குரிய   நெறி   இடமென்றற்கு,
அதுவென்று  ஒருமையாற்  கூறினார்,  தலைப்பெய்வதோரிட மென்னும்
பொதுமைப்பற்றி.  இரவு களவிற்குச் சிறத்தலின்  முற்கூறினார். அறியத்
தோன்றுமென்றதனாற்  சென்று  காட்டல்  வேண்டா;  நின்று  காட்டல்
வேண்டுமெனக் கொள்க.                                  (39)

இரவுக்குறியிட மிதுவெனல்

131. இரவுக் குறியே இல்லகத் துள்ளும்
மனையோர் கிளவி கேட்கும்வழி யதுவே
மனையகம் புகாஅக் காலை யான.

இது, நிறுத்தமுறையானே இரவுக்குறியிடம் உணர்த்துகின்றது.

(இ-ள்.)     அகமனைப்  புகாக்  காலை  ஆன  இரவுக்குறியே  -
உள்மனையிற்  சென்று  கூடுதற்கு உரித்தல்லாத முற்காலத்து உண்டான
இரவுக்குறியே:

ஏகாரம், பிரிநிலை.

இல்லகத்துள்ளும்     மனையோர்  கிளவி  கேட்கும் வழியதுவே -
இவ்வரைப்பினுள்ளதாகியும்   மனையோர்   கூறிய   கிளவி  கேட்கும்
புறமனையிடத்ததாம் எ-று.

அல்ல குறிப்பிட்டதனை  ஒருவாற்றான் உணர்த்திய காலத்து அவன்
அதுகேட்டு  ஆற்றுவனென்பது  கருதி,  ‘மனையோர்  கிளவி கேட்கும்
வழியது’    என்றார்;    ஏகாரம்    ஈற்றசை:   என்றது,   இரவுக்குறி
அம்முயற்சிக்காலத்து   அச்சநிகழ்தலின்,  அகமனைக்கும்  புறமதிற்கும்
நடுவே   புணர்ச்சி   நிகழுமென்றதாம்.   அகமனையிற்   புகாக்காலை
யெனவே,  இரவுக்குறி  அங்ஙனஞ்  சிலநாள்  நிகழ்ந்த பின்னர், அச்ச
மின்றி உள்மனையிற் சென்று கூடவும் பெறுமென்பதுங் கூறியதாம்.

உ-ம்:

“அஞ்சிலம் பொடுக்கி யஞ்சினள் வந்து
துஞ்சூர் யாமத்து முயங்கினள் பெயர்வோள்”  (அகம்.198)

எனவும்,

“மிடையூர் பிழியக் கண்டனெ னிவளென
அலையல் வாழிவேண் டன்னை”            (அகம்.158)

எனவும்,

“அட்டி லோலை தொட்டனை நின்மே.”        (நற்.300)

எனவும் வருவன பிறவும் மனையோர் கிளவி கேட்கும் வழியது.

“உளைமான் துப்பி னோங்குதினைப் பெரும்புனத்துக்
கழுதிற் கானவன் பிழிமகிழ்ந்து வதிந்தென
உரைத்த சந்தின்ஊர விருங்கதுப்பு
ஐதுவர லசைவளி மாற்றக் கைபெயரா
ஒலியல் வார்மயிர் உளரினள் கொடிச்சி
பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக்
குரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது
படாஅப் பைங்கண் பாடுபெற் றொய்யென
மறம்புகன் மழகளி றுறங்கு நாடன்
ஆர மார்பின் அணிமிஞி றார்ப்பத்
தாரன் கண்ணியன் எஃகுடை வலத்தன்
காவல ரறிதல் ஓம்பிப் பையென
வீழாக் கதவ மசையினன் புகுதந்
துயங்குபட ரகல முயங்கித் தோண்மணந்
தின்சொ லளைஇப் பெயர்ந்தனன் தோழி
இன்றெவன் கொல்லோ கண்டிகு மற்றவன்
நல்கா மையின் அம்ப லாகி
ஒருங்குவந் துவக்கும் பண்பின்
இருஞ்சூ ழோதி ஒண்ணுதற் பசப்பே. ”       (அகம்.102)

இது மனையகம் புக்கது.

தலைவி     புறத்துப்  போகின்றாளெனச்  செவிலிக்கு  ஓர்  ஐயம்
நிகழ்ந்தவழிப்  பின்னர்  மனையகத்துப்  புணர்ச்சி  நிகழுமென்றுணர்க.
                                                      (40)

பகற்குறியிட மிதுவெனல்

132. பகற்புணர் களனே புறனென மொழிப
அவளறி வுணர வருவழி யான.