|
தூக்கிய வசைவிற் கொல்லோ
தெண்ணீர்ப் பொய்கையுள் வீழ்ந்தென
எண்ணினை யுரைமோ வுணர்குவல் யானே.”
இது தோழி தாய்க்குக் கூறுவாளாய் அல்லகுறி அறிவித்தது.
“மணிநிற நெய்தல் இருங்கழிச் சேர்ப்பன்
அணிநல முண்டகன்றா னென்றுகொ லெம்போல்
திணிமண லெக்கர்மே லோதம் பெயர்த்
துணிமுந்நீர் துஞ்சா தது.”
(ஐந்.எழு.60)
இது தோழி இல்லுளிருந்து சிறைப்புறமாகக் கூறியது.
திங்கள் மேல் வைத்துக் கூறுவனவும் ஓதத்தின் மேல் வைத்துக்
கூறுவனவும் பிறவுங் கொள்க.
“அரவளை மென்றோ ளனுங்கத் துறந்து
கரவல மென்றாரைக் கண்ட திலையால்
இரவெலா நின்றாயா லீர்ங்கதிர்த் திங்காள்.”
“புன்னை நனைப்பினும் பூஞ்சினை தோயினும்
பின்னிருங் கூந்தலென் றோழி நடையொக்கு
மன்னம் நனையாதி வாழி கடலோதம்”
என வருவன பிறவுங் கொள்க. ‘படுதல்’
எதிர்ப்படாமையை
உணர்த்திற்று. ஆண்டுத் தன்மேல் தவறேற்றாது தலைவன் பொழுதறிந்து வாராமையின் மயங்கிற்றென்று அமைவுதோன்றலின் ‘அமை’ வென்றார். அது,
“தான்குறி வாயாத் தப்பற்குத்
தாம்பசந் தனவென் றடமென் றோளே”
(குறுந்.121)
என்றாற் போல வரும். இதன் பயன் தலைவி துன்பந் தனதாகத்
துன்புறுதலாயிற்று.
(42)
தலைவனு மல்லகுறியால் வருந்துவனெனல்
134. ஆங்காங் கொழுகும் ஒழுக்கமு முண்டே
யோங்கிய சிறப்பின் ஒருசிறை யான.
இது தலைவனும் அல்லகுறியான் வருந்துவனென்கின்றது.
(இ-ள்.)
ஓங்கிய சிறப்பின் - தனது மிக்க தலைமைப் பாட்டினானே
பொழுதறிந்து வாராமையின்; ஒருசிறை ஆன ஆங்கு - தான் குறிசெய்வ தோரிடத்தே தன்னானன்றி
இயற்கையான் உண்டான அவ்வல்ல குறியிடத்தே; ஆங்கு ஒழுகும் ஒழுக்கமும் உண்டு - தலைவியுந் தோழியுந்துன்புறுமாறு
போலத் தலைவனுந் துன்புற்று
ஒழுகும் ஒழுக்கமும் உண்டு எ-று.
முன்னர் நின்ற ‘ஆங்கு’
முன்னிற்சூத்திரத்து அல்லகுறியைச்
சுட்டிற்று; பின்னர் நின்ற ‘ஆங்கு’ உவமவுருபு.
உ-ம்:
“தாவி னன்பொன் றைஇய பாவை
விண்டவ ழிளவெயிற் கொண்டுநின் றன்ன
மிகுகவின் எய்திய தொகுகுரல் ஐம்பால்
கிளையரி நாணற் கிழங்குமணற் கீன்ற
முளையோ ரன்ன முள்ளெயிற்றுத் துவர்வாய்
நயவன் றைவருஞ் செவ்வழி நல்யாழ்
இசையோர்த் தன்ன இன்றீங் கிளவி
அணங்குசா லரிவையை நசைஇப் பெருங்களிற்
றினம்படி நீரிற் கலங்கிய பொழுதிற்
பெறலருங் குரைய ளென்னாய் வைகலும்
இன்னா வருஞ்சுர நீந்தி நீயே
யென்னை யின்னற் படுத்தனை மின்னுவசி
புரவுக்கார் கடுப்ப மறலி மைந்துற்று
விரவுமொழிக்
|