நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2593
Zoom In NormalZoom Out


 

அக்கருமத்திற்கு   இடையூறு   உளவாங்கொலென்று   அழுங்குதலும்;
அதனோர் அன்ன - கிழவற்கு இல்லை எ-று.

கிழவற்கில்லையெனவே  கிழத்திக்குந்  தோழிக்கும்   உளவாயிற்று.
அவை முற்காட்டியவற்றுட் காண்க.                          (45)

களவினைத் தந்தை முதலியோர் இவ்வாறுணர்வரெனல்

137. தந்தையுந் தன்னையு முன்னத்தின் உணர்ப.

இது  தந்தையும்    தன்னையுங்    களவொழுக்கம்    உணருமாறு
கூறுகின்றது.

(இ-ள்.)  தந்தையும் தன்னையும் ஒருவர் கூறக்கொள்ளாது உய்த்துக்
கொண்டுணர்வர் எ-று.

நற்றாய் அறத்தொடு நின்ற வழியும்,

“இருவர்கண் குற்றமு மில்லையா லென்று
தெருமந்து சாய்த்தார் தலை”                 (கலி.39)

என்றலின்,  முன்னர்  நிகழ்ந்த  வெகுட்சி  நீங்கி  உய்த்துக் கொண்டு
உணர்ந்தாராயிற்று.                                       (46)

நற்றாய் இவ்வாறு அறத்தொடு நிற்பாளெனல்

138. தாய்அறி வுறுதல் செவிலியோ டொக்கும்.

இது  தந்தை தன்னையர்க்கு நற்றாய் களவொழுக்கம் உணர்த்துமாறு
கூறுகின்றது.

(இ-ள்.)  தாய் அறிவுறுதல் - நற்றாய் களவொழுக்கம் உண்டென்று
அறிந்த  அறிவு  தந்தைக்குந்   தன்னைக்குஞ்  சென்று  உறுந்தன்மை;
செவிலியோடு   ஒக்கும்  -  செவிலி  நற்றாய்க்கு  அறத்தொடு  நின்று
உணர்த்திய தன்மையோடு ஒக்கும் எ-று.

என்றது,  செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்றாற்போல, நற்றாயுந்
தந்தைக்குந் தன்னைக்கும் அறத்தொடு நிற்கும் என்றவாறாயிற்று. அது,

“எனவாங், கறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட
வென்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்”         (கலி.39)

என்பதனான் உணர்க.

இனி இதற்கு நற்றாயுஞ் செவிலி உணர்ந்தாற்போல் உணரு மென்று
பொருள்  கூறில்  ‘தாய்க்கும் வரையார்’ (தொல்.பொ.116)  என்னுஞ்
சூத்திரம் வேண்டாவாம்.                                  (47)

களவு வெளிப்படுதற்கு நிமித்தமாவான் தலைவனெனல்

139. அம்பலு மலருங் களவுவெளிப் படுத்தலின்
அங்கதன் முதல்வன் கிழவ னாகும்.

இது களவு வெளிப்படுத்தற்கு நிமித்தமாவான் தலைமகனென்கின்றது.

(இ-ள்.)     அம்பலும்  அலருங்   களவு   வெளிப்படுத்தலின்  -
முகிழ்த்தலும்   பலரறியச்  சொல்  நிகழ்த்தலுங்  களவொழுக்கத்தினை
வெளிப்படுத்தலான்;   அங்கதன்   முதல்வன்   கிழவன்   ஆகும்  -
அவ்விடத்து   அவ்வெளிப்படை    நிகழ்த்துதற்கு   நிமித்தமாயினான்
தலைமகனாம் எ-று.

தலைவனை   அறிந்தபின் அல்லது முற்கூறிய  ஐயம் நிகழாமையின்
தலைவிவருத்தம்  நிமித்தமாகாது. ஆண்டு ஐயம் நிகழ்தலன்றித் துணிவு
தோன்றாமையின்,  வரைவு  நீட்டிப்போனுந்,  தலைவி  தமர்க்குக் கூறி
வெளிப்படுப்போனுந் தலைவனே என்றுணர்க. அது,

“நீரொலித் தன்ன பேஎர்
அலர்நமக் கொழிய அழப்பிரிந் தோரே”      (அகம்.211)

“நெறியறி செறிகுறி புரிதிரி பறியா
வறிவனை முந்துறீஇ”                        (கலி.39)

என்றாற்போல     வருவனவும்    பிறவும்    வெளிப்படையாமாற்றாற்
கண்டுணர்க.
                                            (48)

வரைவு இருவகைப்படுமெனல்

140. வெளிப்பட வரைதல் படாமை வரைதலென்
றாயிரண் டென்ப வரைத லாறே

இதுவரையும் பகுதி இனைத்தென்