நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2599
Zoom In NormalZoom Out


 

ந்த கற்பாயிற்று.                                          (1)

உடன்போகியகாலத்துக் கொடுப்போரின்றியுங்
கரணம் நிகழுமெனல்

143. கொடுப்போர் இன்றியுங் கரணம் உண்டே
புணர்ந்துடன் போகிய காலை யான.

இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி.

(இ-ள்.)  கொடுப்போர்  இன்றியும்  கரணம்  உண்டே - முற்கூறிய
கொடைக்குரிய   மரபினோர்   கொடுப்பக்   கோடலின்றியுங்  கரணம்
உண்டாகும்;  புணர்ந்து உடன் போகிய காலையான - புணர்ந்து உடன்
போகிய காலத்திடத்து எ-று.

இது  புணர்ந்து உடன்போயினார் ஆண்டுக்  கொடுப்போ ரின்றியும்
வேள்வி யாசான் காட்டிய சடங்கின் வழியாற் கற்புப்  பூண்டு வருவதும்
ஆமென்றவாறு.  இனி  ஆண்டு  வரையாது  மீணடுவந்து  கொடுப்பக்
கோடல்  உளதேல் அது மேற்கூறிய தன்கண் அடங்கும். இனிப் போய
வழிக்  கற்புப்  பூண்டலே  கரணம் என்பாருமுளர். எனவே கற்பிற்குக்
கரணம் ஒருதலையாயிற்று.

“பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி ஆய்கழற்
செயலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே.”        (குறுந்.15)

இதனுள்     ‘வாயாகின்று’    எனச்    செவிலி     நற்றாய்க்குக்
கூறினமையானும் ‘விடலை’யெனப்  பாலை  நிலத்துத் தலைவன் பெயர்
கூறினமையானும்   இது   கொடுப்போரின்றிக்   கரணம்   நிகழ்ந்தது.
“அருஞ்சுர  மிறந்தவென்  பெருந்தேள்  குறுமகள்”  (அகம்.195)
என்பதும் அது.                                           (2)

அந்தணர் முதலிய மூவர்க்கும் புணர்ந்த கரணம்
வேளாளர்க்குரியவான காலமு முண்டெனல்

144. மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங்
கீழோர்க் காகிய காலமு முண்டே.

இது   முதலூழியில்   வேளாளர்க்கு    உரியதோர்   இலக்கணங்
கூறுகின்றது.

(இ-ள்.) மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்