நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2625
Zoom In NormalZoom Out


 

விடத்தும்  நிகழுங்  கூற்றுக்களை  வாயிலெதிர்  கூறுங்  கூற்றோடே
தொகுத்துப்  பண்ணுதற்கமைந்த  பகுதியுடையவாகிய  முப்பத்துமூன்று
கிளவியுந்  தலைவன்கண்  நிகழ்வன என்று முடிக்க. எடுத்துரைப்பினுந்
தந்நிலைகிளப்பினும்      அக்கூற்றுக்களையும்      வாயிலெதிரொடு
தொகைஇயென  முடிக்க. இவற்றுட் பண்ணிக் கொள்ளும் பகுதியவான,
யாம்    மறைந்து    சென்று    இவனைக்    கண்ணைப்புதைத்தால்
தலைநின்றொழுகும்  பரத்தையர் பெயர்  கூறுவனென்று உட்கொண்டு
காமக்கிழத்தியாதல்  தலைவியாதல் சென்று கண்புதைத்துழித் தலைவன்
கூறுவனவும்,  பள்ளியிடத்து வந்திருந்து கூறுவனவும், இவள் ஊடற்குக்
காரணம் என்னென்று தோழி வினாயவழிக் கூறுவனவும், பிரிந்தகாலத்து
இவளை மறந்தவா றென்னென்ற தோழிக்குக் கூறுவனவும், பிறவுமாம்.

உ-ம்:

“சிலம்புகமழ் காந்தள் நறுங்குலை யன்ன
நலம்பெறு கையினெங் கண்புதைத் தோயே
பாயல் இன்றுணை யாகிய பணைத்தோள்
தோகை மாட்சிய மடந்தை
நீயலது உளரோஎன் நெஞ்சமர்ந் தோரே”   (ஐங்குறு.293)

“தாழிருள் துமிய மின்னித் தண்ணென
வீழுறை யினிய சிதறிஊழிற்
கடிப்பிகு முரசின் முழங்கி இடித்திடித்துப்
பெய்தினி வாழியோ பெருவான் யாமே
செய்வினை முடித்த செம்ம லுள்ளமொ
டிவளின் மேவலம் ஆகிக் குவளைக்
குறுந்தாள் நாள்மலர் நாறும்
நறுமென் கூந்தல் மெல்லணை யேமே”       (குறுந்.270)

“இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றோனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்”             (குறள்.1315)