நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2635
Zoom In NormalZoom Out


 

தந் ததுபோலத் தாமெம்மை
எள்ளுமார் வந்தாரே ஈங்கு;
ஏதப்பா டுள்ளிப் புரிசை வியலுள்ளோர்
கள்வரைக் காணாது கண்டேமென் பார்போலச்
சேய்நின்று செய்யாத சொல்லிச் சினவல்நின்
ஆணை கடக்கிற்பார் யார்;
அதிர்வில் படிறெருக்கி வந்தென் மகன்மேல்
முதிர்பூண் முலைபொருத ஏதிலாள் முச்சி
உதிர்துக ளுக்கநின் னாடை யொலிப்ப
எதிர்வளி நின்றாய்நீ செல்;
இனி யெல்லா யாம்,
தீதிலேம் என்று தெளிப்பவும் கைந்நீவி
யாதொன்று மெங்கண் மறுத்தர வில்லாயின்
மேதக்க வெந்தை பெயரனை யாங்கொள்வேந்
தாவா விருப்பொடு கன்றியாத் துழிச்செல்லும்
ஆபோற் படர்தக நாம்”                     (கலி.81)

என வரும்.

தந்தையர் ஒப்பர்  மக்கள்  என்பதனான் அந்தமில் சிறப்பின் மகப்
பழித்து  நெருங்கலும்  -  அங்ஙனம் விளையாடுகின்ற காலத்து மக்கள்
தந்தையரை     ஒப்பரென்னும்     வேதவிதிபற்றி     முடிவில்லாத
சிறப்பினையுடைய மகனைப் பழித்து வெகுளுதற் கண்ணும்:

மகனுக்கும்   இது   படுமென்று  கருதிக்  கூறலின்  தலைவனைப்
பழித்தென்னாது ‘மகப்பழித்’ தென்றார்.

“மைபடு சென்னி” என்னும் மருதக்கலியுள்,

“வனப்பெலா நுந்தையை யொப்பினும் நுந்தை
நிலைப்பாலுள் ஒத்த குறியென்வாய்க் கேட்டொத்தி
கன்றிய தெவ்வர்க் கடந்து களங்கொள்ளும்
வென்றிமாட் டொத்தி பெருமமற் றொவ்வாதி
யொன்றினேம் யாமென்றுணர்ந்தாரை நுந்தைபோல்
மென்றோள் நெகிழ விடல்”                  (கலி.86)

என அவனைக் கொண்டு விளையாடியவழி  அவன் தலைவன்மேல்
வீழ்தலின்,

“தந்தை வியன்மார்பில் பாய்ந்தான் அறனில்லா
அன்பிலி பெற்ற மகன்.”                     (கலி.86)

எனத் தன் திறத்து அன்பிலனென நெருங்கிக் கூறியவாறு காண்க.

(கொடியோர்  கொடுமை  சுடுமென  ஒடியாது  நல்லிசை நயந்தோர்
சொல்லொடு   தொகைஇப்   பகுதியின்   நீங்கிய  தகுதிக்  கண்ணும்)
கொடியோர் நல்லிசை நயந்தோர்  சொல்லொடு தொகைஇ - கொடியோ
ரென்றது  பாணர்   கூத்தர்   விறலியர்   அந்தணர்   முதலியோரை;
கொடியோராய்த்   தலைவன்   புகழைக்   கூறுதற்கு   விரும்பினோர்
பரத்தையர்க்கு  வாயிலாய்   வந்து   கூறிய   சொல்லோடே  தானும்
அவரிடத்தே  சேர்ந்து;  பகுதியி  னீங்கிய  கொடுமை - காவற்பாங்கிற்
பக்கமும்  ஆங்கோர்  பக்கமுமாகிய பகுதி (41) காத்தலினின்று நீங்கிய
பரத்தையரைக் கூடிய கொடுமை; சுடுமென ஒடியாது தகுதிக்கண்ணும் -
நெஞ்சைச்  சுடுமென்று  கூறி அவன் தவற்றைக் கூறுதலைத் தவிராமற்
கூறுதற்குத் தக்க தகுதியிடத்தும்;

இன், நீக்கப்பொருட்டு; பகுதி - கூறுபாடு, ஆகுபெயர்; பகுதிகளைக்
காத்தற்குப் பிரிவேனெனக் கூறிப் பிரிந்து பாணர்