|
நின்று தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்ணும்) உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின் - தலைவன் தெளிவிக்கப்படுந் தன்மைக்கணில்லாத ஊடல் மிகுத்தோளிடத்து:
உணர்ப்புப் ‘புணர்ப்புப்’போல் நின்றது.
உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று - ஊடல் தீர்த்தலை விரும்பிய தலைவன் வயத்தாளாய் நின்று; தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்ணும் - தான் தலைவியைக் கழறி அவள் சீற்றம் போந்தன்மை உண்டாக்கிய தகுதிக் கண்ணும்:
உ-ம்:
“துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை
அரிமலர் ஆம்பல் மேய்ந்த நெறிமருப்
பீர்ந்தண் எருமைச் சுவல்படு முதுபோத்துத்
தூங்குசேற் றள்ளல் துஞ்சிப் பொழுதுபடப்
பைந்நிண வாராஅல் குறையப் பெயர் தந்து
பரூஉக்கொடிப் பகன்றை சூடி மூதூர்ப்
போர்ச்செறி மள்ளரிற் புகுதரு மூரன்
தேர்தர வந்த தெரியிழை ஞெகிழ்தோள்
ஊர்கொள் கல்லா மகளிர்த் தரத்தரப்
பரத்தைமை தாங்கலோ விலனென வறிதுநீ
புலத்தல் ஒல்லுமோ மனைகெழு மடந்தை
அதுபுலந் துறைதல் வல்லி யோரே
செய்யோள் நீங்கச் சில்பதங் கொழித்துத்
தாமட் டுண்டு தமிய ராகித்
தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப
வைகுந ராகுதல் அறிந்தும்
அறியா ரம்மவஃதுடலு மோரே.” (அகம்.316)
இது, தோழி தலைவியை வெகுண்டு ஆக்கியவாறு காண்க.
(அருமைக் காலத்துப் பெருமை காட்டிய எண்மைக் காலத்து இரக்கத்தானும்) எண்மைக் காலத்து - தாம் எளியராகிய கற்புக் காலத்திலே; அருமைக் காலத்துப் பெருமை காட்டிய இரக்கத்தானும் - களவுக்காலத்துத் தமது பெருமையை உணர்த்திய வருத்தத்தின் கண்ணும்:
உ-ம்:
“வேம்பின் பைங்காயென் தோழி தரினே
தேம்பூங் கட்டி யென்றனிர் இனியே
பாரி பறம்பில் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே.” (குறுந்.196)
என வரும்.
பாணர் கூத்தர் விறலியர் என்று - பாணருங் கூத்தரும் விறலியரு மென்று சொல்லுகின்ற இம் மூவரும்; பேணிச் சொல்லிய குறைவினை எதிரும் - விரும்பிக்கூறிய குறையுறும் வினைக்கு எதிராகவும்: கூற்று நிகழும்
‘எதிரு’ மென்றது அவர் வாயில்வேண்டிய வழித
|