|
தோழி அவர்க்கு மறுத்தலும் மறுத்தாள்போல நேர்தலுங் கூறியதாம்.
உ-ம்:
“புலைமக னாதலிற் பொய்ந்நின் வாய்மொழி
நில்லல் பாண செல்லினிப் பரியல்
பகலெஞ் சேரி காணின்
அகல்வய லூரன் நாணவும் பெறுமே.”
இது பாணர்க்கு வாயின் மறுத்தது.
உ-ம்:
“விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைத்
களிற்றுச் செவியன்ன பாசடை தயங்க
உண்துறை மகளிர் இரியக் குண்டுநீர்
வாளை பிறழும் ஊரற்கு நாளை
மகட்கொடை யெதிர்ந்த மடங்கெழு பெண்டே
தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி
உடன்பட் டோராத் தாயரோ டொழிபுடன்
சொல்லலை கொல்லோ நீயே வல்லைக்
கன்றுபெறு வல்சிப் பாணன் கையதை
வள்ளுயிர்த் தண்ணுமை போல
உள்யாது மில்லதோர் போர்வையஞ் சொல்லே.” (நற்.310)
இது விறலிக்கு வாயின் மறுத்தது. மறுப்பாள்போல் நேர்வ வந்துழிக் காண்க.
(நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக் காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும்) நீத்த கிழவனை - பரத்தையிற் பிரிந்து தலைவியைக் கைவிட்ட தலைவனை; நிகழுமாறு படீஇ - தானொழுகும் இல்லறத்தே படுத்தல் வேண்டி; காத்த தன்மையின் - புறத்தொழுக்கிற் பயனின்மை கூறிக் காத்த தன்மையினானே; கண்இன்று பெயர்ப்பினும் - கண்ணோட்டமின்றி நீக்கினும்:
உ-ம்:
“மனையுறை கோழிக் குறுங்காற் பேடை
வேலி வெருகின் மாலை யுற்றெனப்
புகுமிடன் அழியாது தொகுபுடன் குழீஇப்
பைதற் பிள்ளைக் கிளை பயிர்ந் தாஅங்
கின்னா திசைக்கும் அம்பலொடு
வாரல் வாழியர் ஐயவெம் தெருவே.” (குறுந்.139)
இதனுள் ‘அம்பலொடு வார’ லெனவே பன்னாள் நீத்தமையுங் கண்ணின்று பெயர்த்தமையுங் கூறிற்று. கோழி போலத் தாயர் மகளிரைத் தழீஇக் கொண்டாரென்றலிற் புறம்போயும் பயமின் றெனக் காத்த தன்மை கூறிற்று.
(பிரியுங் காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும் உளப்படப் பிறவும்) பிரியுங் காலை எதிர்நின்று சாற்றிய - தலைவன் கற்பிடத்துப் பிரியுங்கால்
|