|
தலைவிகூற்றினுள் அடங்குவதன்றித் தோழிக்கே கூறத்தகும் வேறுபாடு உண்டாகவந்த கிளவிகளெல்லாந் தோழிக்கு உரியவென்று கூறுவர் புலவர் எ-று.
இச் சூத்திரத்துக்கண் ஏழனுருபும் அவ்வுருபு தொக்கு நின்று விரிந்தனவுஞ் செயினென்னும் வினையெச்சமும் உரியவென்னுங் குறிப்புவினை கொண்டன. அவற்றை இன்னவிடத்தும் இன்னவிடத்தும் இன்னது செய்யினும் உரியவென்று ஏற்பித்து முடிக்க. (9)
காமக்கிழத்தியர் கூற்றுக்கள் நிகழுமிட மிவை எனல்
151. புல்லுதன் மயக்கும் புலவிக் கண்ணும்
இல்லோர் செய்வினை யிகழ்ச்சிக் கண்ணும்
பல்வேறு புதல்வர்க் கண்டுநனி யுவப்பினும்
பொறையின்று பெருகிய பருவரற் கண்ணுங்
காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையின்
தாய்போல் தழீஇக் கழறியம் மனைவியைக்
காய்வின் றவன்வயிற் பொருத்தற் கண்ணும்
இன்னகைப் புதல்வனைத் தழீஇ இழையணிந்து
பின்னர் வந்த வாயிற் கண்ணும்
மனையோ ளொத்தலில் தன்னோர் அன்னோர்
மிகைபடக் குறித்த கொள்கைக் கண்ணும்
எண்ணிய பண்ணையென் றிவற்றொடு பிறவுங்
கண்ணிய காமக் கிழத்தியர் மேன.
இது, காமக்கிழத்தியர் கூற்றெல்லாந் தொகுத்துக் கூறுகின்றது; காமக்கிழத்தியராவார் கடனறியும் வாழ்க்கையுடையராகிக் காமக் கிழமைபூண்டு இல்லறநிகழ்த்தும் பரத்தையர். அவர் பலராதலிற் பன்மையாற் கூறினார். அவர் தலைவனது இளமைப்பருவத்திற் கூடி முதிர்ந்தோரும், அவன் தலைநின்று ஒழுகப்படும் இளமைப்பருவத்தோரும் இடைநிலைப் பருவத்தோருங், காமஞ்சாலா இளமையோருமெனப் பல பகுதியராம். இவரைக் ‘கண்ணிய காமக்கிழத்திய’ ரெனவே கண்ணாத காமக்கிழத்தியரும் உளராயிற்று. அவர் கூத்தும்
|