|
வயல்வெள் ளாம்ப லுருவ நெறித்தழை
யைதக லல்கு லணிபெறத் தைஇ
விழவிற் செலீஇயர் வேண்டு மன்னோ
யாண ரூரன் காணுந னாயின்
வரையா மையோ அரிதே வரையின்
வரைபோல் யானை வாய்மொழி முடியன்
வரைவேய் புரையு நற்றோள்
அளிய தோழி தொலையுந பலவே.” (நற்.390)
இதனுள், விழவிற் செல்கின்ற தலைவியைக் கண்டு காமக்கிழத்தி இவள் தோற்றப் பொலிவொடு புறம்போதரக் காணின் வரைவனெனவும், அதனான் இல்லுறைமகளிர் பலருந் தோள் நெகிழ்பவெனவும் பொறாது கூறியவாறு காண்க.
(காதற் சோர்விற் கடப்பாட்டு ஆண்மையில் தாய்போல் தழீஇக் கழறி அம்மனைவியைக் காய்வு இன்று அவன் வயிற் பொருத்தற்கண்ணும்) காதற் சோர்வில் - தானுங் காய்தற்குரிய காமக்கிழத்தி தலைவன் தன்மேற் காதலை மறத்தலானும்: கடப்பாட்டாண்மையிற் சோர்வில் - அவற்கு இல்லொடு பழகிய தொல்வரற் கிழமையாகிய ஒப்புரவின்மையானும்; தாய்போல் தழீஇக் கழறி - தலைவியைச் செவிலிபோல உடன்படுத்திக் கொண்டு தலைவனைக் கழறி; அம்மனைவியைக் காய்வின்று அவன் வயிற் பொருத்தற்கண்ணும் - அத்தலைவியைக் காய்தலின்றாக்கித் தலைவனிடத்தே கூட்டுமிடத்தும்:
இது, துனிநிகழ்ந்துழித் தலைவனது தலைவளரிளமைக்கு ஒருதுணையாகி முதிர்ந்த காமக்கிழத்தி இங்ஙனங் கூட்டுமென்றார்.
உ-ம்:
“வயல்வெள் ளாம்பல் சூடுதரு புதுப்பூக்
கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்
ஓய்விடு நடைப்பகடு ஆரு மூரன்
தொடர்புநீ வெஃகினை யாயின் என்சொற்
கொள்ளன் மாதோ முள்ளெயிற் றோயே
நீயே பெருநலத் தகையே யவனே
நெடுநீர்ப் பொய்கை நடுநா யெய்தித்
தண்கமழ் புதுமல ரூதும்
வண்டென மொழிப மகனென் னாரே.” (நற்.290)
இதனுள் நீ இளமைச் செவ்வியெல்லாம் நுகர்ந்து புதல்
|