|
தலும் ஊடலும் பிறந்து காமச் சிறப்பெய்தும். ஆங்கும் ஈங்குமெனவே அவ்விருவரிடத்துந் தலைவன் அவை நிகழ்த்தினானாகலின் அவற்குங் காமச் சிறப்பு ஒருவாற்றாற் கூறியவாறாயிற்று. இது காமக்கிழத்தியரல்லாத பரத்தையரொடு விளையாடிய பகுதியாகலின் வேறு கூறினார். காமக்கிழத்தியர் ஊடலும் விளையாடலுந் தலைவி ஊடலும் விளையாடலும் ‘யாறுங் குளனும்’ (தொல்.பொ.191)
என்புழிக் கூறுப. அஃது அலரெனப்படாமையின் விளையாட்டுக் கண்ணென விரித்த உருபு வினைசெய்யிடத்து வந்தது.
உ-ம்:
“எஃகுடை எழினலத் தொருத்தியொடு நெருநை
வைகுபுனல் அயர்ந்தனை யென்ப அதுவே
பொய்ப்புறம் பொதிந்தயான் கரப்பவுங் கையிகந்
தலரா கின்றால் தானே.” (அகம்.116)
எனவும்,
“கோடுதோய் மலிர்நிறை ஆடி யோரே.” (அகம்.166)
எனவும் தலைவியும் பரத்தையும் பிறர் அலர் கூறியவழிக் காமஞ் சிறந்து புலந்தவாறு காண்க. ஆண்டுப் பணிந்து கூறுங்காலும் விளையாடுங்காலுந் தலைவன் காமச்சிறப்புக் காண்க. (23)
வாயில்கள் தலைவி முன்கிழவோன் கொடுமை கூறாரெனல்
165. மனைவி தலைத்தாள் கிழவோன் கொடுமை
தம்முள ஆதல் வாயில்கட் கில்லை.
இது, வாயில் கட்டு உரிய இலக்கணம் கூறுகின்றது.
(இ-ள்.)
மனைவி தாட்டலை - தலைவி எத்திறத்தானும் புலந்துழி அவளிடத்து; கிழவோன் கொடுமை - தலைவன் கொடுந்தொழில்களை; தம் உள ஆதல் - தம் உரைக்கண் உளவாக்கி உரைத்தல்; வாயில்கட்கு இல்லை - தோழி முதலிய வாயில்களுக்கில்லை எ-று.
தாட்டலையென மாறுக. அது பாதத்திடத்தென்னுந் தகுதிச் சொல். அது வாயில்கள் கூற்றாய் வந்தது. உதாரணம் வந்துழிக் காண்க. (24)
வாயில்கட்கு எய்தியதிகந்துபடாமைக் காத்தல்
166. மனைவி முன்னர்க் கையறு கிளவி
மனைவிக் குறுதி உள்வழி யுண்டே.
இஃது எய்தியது இகந்துபடாமற் காத்தது;
|