|
விளக்கு முதலிய மங்கலங்களைக் கொண்டு எதிரேற்றுக்கோடற் சிறப்பினும்; இன் இழைப் புதல்வனை வாயில்கொண்டு புகினும் - இனிய பூண்களை யணிந்து தொன்முறை மனைவி புதல்வனைக் கோலங்காட்டிய செல்வான் போலப் பின்முறை வதுவையரிடத்து வாயிலாகக் கொண்டு செல்லினும்; கிழவோன் இறந்தது நினைஇ - தலைவன் இங்ஙனம் செய்கையுடைய இருவகைத் தலைவியரையுங் கைவிட்டுப் பரத்தைமை செய்து ஒழுகியவற்றை நினைந்து; ஆங்கட் கலங்கலும் உரியன் என்மனார் புலவர் - அப்பரத்தையர்கண் நிகழ்கின்ற காதல் நிலைகுலைந்து மீளுதலும் உரியன் எனக் கூறுவர் புலவர் எ-று.
உம்மை எதிர்மறையாகலான் மீளாமையும் உரித்தாயிற்று; என்னை; இளமைப்பருவங் கழியாத காலத்து அக்காதன் மீளாதாகலின். பெரும்பொருளென்றார், வேதநூல் அந்தணர்க்குப் பின்முறை வதுவை மூன்றும் அரசர்க்கிரண்டும் வணிகர்க்கொன்றும் நிகழ்தல் வேண்டுமெனக் கூறிற்றென்பது உணர்த்துதற்கு.
இனி, மகப்பேறு காரணத்தாற் செய்யும் வதுவையென்றுமாம். ‘ஆக்கிய’ வென்றதனானே வேளாளர்க்கும்பின்முறை வதுவை கொள்க. தொன்மனைவி யென்னாது ‘முறை’ யென்றதனானே அவரும் பெருஞ் சிறப்புச்செய்து ஒரு கோத்திரத்தராய் ஒன்றுபட்டொழுகுவரென்பது கூறினார். இங்ஙனந் தொன்முறையார் பின்முறையாரை மகிழ்ச்சி செய்தமை கண்டு இத்தன்மையாரை இறந்தொழுகித் தவறுசெய்தேமே யென்றும் பின்முறையார் அவர் புதல்வரைக் கண்டு மகிழ்ச்சி செய்து வாயில் நேர்ந்த குணம்பற்றி இவரை இறந்தொழுகித் தவறுசெய்தேமே யென்றும் பரத்தைமை நீங்குவனென்றார். ‘புகினு’ மெனவே பிறர் மனைப் புதல்வரென்பது பெற்றாம். தொன்முறை மனைவி
|