|
தன்னொடு புனலாடல் வேண்டிய தலைவன், முன் புனலாடியதனை அவள் கேட்பத் தோழிக் குரைத்தது.
“வண்ண வொண்டழை” (ஐங்குறு.73) “விசும்பிழி தோகை” (ஐங்குறு.74)
இவையும் அது, ‘புனவளர் பூங்கொடி” என்னும் மருதக்கலியுள். (92)
“அன்ன வகையால்யான் கண்ட கனவுதான்
நன்வாயாக் காண்டை நறுநுதால் பன்மாணுங்
கூடிப் புணர்ந்தீர் பிரியன்மின் நீடிப்
பிரிந்தீர் புணர்தம்மின் என்பன போல
அரும்பவிழ் பூஞ்சினை தோறும் இருங்குயில்
ஆனா தகவும் பொழுதினான் மேவர
நான்மாடக் கூடன் மகளிரும் மைந்தருந்
தேனிமிர் காவிற் புணர்ந்திருந் தாடுமார்
ஆனா விருப்போ டணியயர்ப காமற்கு
வேனில் விருந்தெதிர் கொண்டு” (கலி.92)
என்னுஞ் சுரிதகத்துக் காவிற் புணர்ந்திருந்தாட நீயுங் கருதெனத் தலைவன் தலைவிக்குக் கூறியவாறு காண்க. (50)
தலைவனும் தலைவியும் இல்லற நிகழ்த்தியபின்
துறவறமும் நிகழ்த்துவர் எனல்
192. காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.
இது, முன்னர் இல்லற நிகழ்த்திய தலைவனுந் தலைவியும் பின்னர்த் துறவறம் நிகழ்த்தி வீடுபெறுப என்கின்றது.
(இ-ள்.)
கிழவனும் கிழத்தியும் - தலைவனுந் தலைவியும்; சுற்றமொடு துவன்றி அறம்புரி மக்களொடு - உரிமைச்சுற்றத்தோடே கூடிநின்று இல்லறஞ் செய்தலை விரும்பிய மக்களோடே ; சான்ற காமங் கடைக்கோட்காலை - தமக்கு முன்னரமைந்த காமத்தினையுந் தீதாக உட்கொண்ட காலத்திலே ; சிறந்தது ஏமஞ் சான்ற பயிற்றல்-அறம்பொரு ளின்பத்திற் சிறந்த வீட்டின்பம் பெறுதற்கு ஏமஞ்சான்றவற்றை அடிப்படுத்தல் ; இறந்ததன் பயனே - யான் முற்கூறிய இல்லறத்தின் பயன் எ-று.
‘சான்றகாமம்’ என்றார் நுகர்ச்சியெல்லாம் முடிந்தமை தோன்ற. இது கடையாயினார் நிற்கும் நிலையென்று உரைத்தற்குக் ‘கடை’ யென்றார். ஏமஞ்சான்றவாவன, வானப் பிரத்தமுஞ் சன்னியாசமும்; எனவே, இல்லறத்தின் பின்னர் இவற்றின்கண்ணே நின்று பின்னர் மெய் யுணர்ந்து வீடுபெறுப என்றார். இவ்வீடு
|