நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2714
Zoom In NormalZoom Out


 

பாடினியும் ; இளையர் -  என்றும்  பிரியா  இளையரும் ;  விருந்தினர்
-  இருவரும்  அன்பு  செய்யும் விருந்தினரும் ; கூத்தர் -  தலைவற்கு
இன்றி  யமையாக்  கூத்தரும் ; விறலியார் - தாமே ஆடலும்  பாடலும்
நிகழ்த்தும்  விறலியரும்  ;  அறிவர்  -  முன்னே  துறவுள்ளத்தராகிய
அறிவரும்  ;  கண்டோர்  -  அவர்  துறவு  கண்டு  கருணைசெய்யுங்
கண்டோரும்   ;   யாத்த   சிறப்பின்  வாயில்கள்  என்ப  -  இந்தத்
தலைவனுந்  தலைவியும்  பெற்ற துறவின்கண்ணே மனம்  பிணிப்புண்ட
சிறப்பினையுடைய வாயில்களென்று கூறுவர் ஆசிரியர் எ-று.

என்றது,  இவர் அத்துறவிற்கு இடையூறாகாது முன்செல்வர், தாமும்
அவரைப்  பிரிவாற்றாமையி  னென்பதாம்.  இதனைக் கற்புங் காமமும்
(தொல்.கற்.11)    என்னுஞ்    சூத்திரத்து   முன்னாக   வாயில்களைத்
தொகுத்துக்  கூறிய  சூத்திரமாக  வைத்தல்  பொருத்த முடைத்தேனும்
யாத்த  சிறப்பினென்று  துறவு  நோக்குதலின்  இதன்பின்   வைத்தார்.
இதற்குக்    கோப்பெருஞ்சோழன்    துறந்துழிப்    பிசிராந்தையாரும்
பொத்தியாரும்   போல்வார்  துறந்தாரென்று  கூறும்  புறச்செய்யுட்கள்
உதாரணம் எ-று.                                         (52)

வினைவயிற்பிரிந்துமீளுந் தலைவற்குரியதோ
ரிலக்கணமுணர்த்தல்

194. வினைவயிற் பிரிந்தோன் மீண்டுவருங் காலை
இடைச்சுர மருங்கின் தவிர்தல் இல்லை
உள்ளம் போல உற்றுழி யுதவும்
புள்ளியற் கலிமா வுடைமையான.

இது பிரிந்து மீளுங்காற் செய்யத் தகுவதோர் இயல்பு கூறுகின்றது.

(இ-ள்.)     வினைவயின்   பிரிந்தோன்   மீண்டு  வருகாலை  -
யாதானுமோர்   செய்வினையிடத்துப்  பிரிந்தோன்  அதனை  முடித்து
மீண்டுவருங்காலத்து  ;  இடைச்சுர  மருங்கின்  தவிர்தல்  இல்லை  -
எத்துணைக்காதம்  இடையிட்டதாயினும்  அவ்விடையின் கணுண்டாகிய
வருவழியிடத்துத்  தங்கிவருதலில்லை ; உள்ளம்போல உற்றுழி உதவும்
-  உள்ளஞ்  சேட்  புலத்தை  ஒரு  கணத்திற்  செல்லுமாறு  போலத்
தலைவன்   மனஞ்   சென்றுற்ற  விடத்தே  ஒரு  கணத்திற்  சென்று
உதவிசெய்யும் ; புள்இயல் கலிமா உடைமையான - புட்