|
“தருமணற் கிடந்த பாவையென்
அருமக ளேயென முயங்கினள் அழுமே.”
(அகம்.165)
இது, நற்றாய் மணற்பாவையைப் பெண்பாலாகக் கூறித்
தழீஇக் கொண்டழுதலிற் பால்கெழு கிளவியாயிற்று.
“தான்றாயாக் கோங்கந் தளர்ந்து முலைகொடுப்ப
ஈன்றாய்நீ பாவை யிருங்குரவே - ஈன்றாள்
மொழிகாட்டா யாயினு முள்ளெயிற்றாள் சென்ற
வழிகாட்டா யீதென்று வந்து.”
(திணை.நூற்.65)
என்பது செவிலி குரவை
வழிகாட்டென்றலிற் பால்கெழு கிளவியாயிற்று. ஏனையிரண்டும் மேல்விலக்குப.
இறந்தது காத்தல்
200. நட்பின் நடக்கை ஆங்கலங் கடையே.
இஃது, இறந்தது காத்தது.
(இ-ள்) ஆங்கு - அந்நால்வரிடத்து ; நட்பின் நடக்கை அலங்கடை - நட்பின்கண்ணே ஒழுகுதலல்லாத அவ்வீரிடத்தும் பால்கெழு கிளவி உரித்து எ-று.
எனவே, நட்புச்செய் தொழுகுந்
தோழிக்கும் பாங்கனுக்கும் ‘பால்கெழு கிளவி’
(199) இன்றென்றார், எனக் கொள்க.
(6)
தலைவிக்கு வேறுபாடு தோன்றியவிடத்து
அதனைப் பரிகரித்தற்குரியாரிவரெனல்
201. உயிரு நாணு மடனு மென்றிவை செயிர்தீர்
சிறப்பின் நால்வர்க்கும் உரிய.
இது, தலைவிக்குத் தலைவனாற்
பிறப்பதொரு வேறுபாடு தோன்றியவழி அதனைப் பரிகரித்தற் குரியோர் இவரென வழுவமைக்கின்றது.
(இ-ள்.)
உயிரும் நாணும் மடனும் என்றிவை - உயிரும் நாணும் மடனுமென்று
கூறப்பட்ட இவை மூன்றும் ; செயிர்தீர் சிறப்பின் நால்வர்க்கும் உரிய - குற்றந் தீர்ந்த தலைமையினை யுடைய நற்றாய்க்குஞ் செவிலிக்குந் தோழிக்குந் தலைவற்கு முரிய எ-று.
உம்மை ஐயமாதலின் தலைவனை யொழித்த மூவர்க்கு
முரிய என்றாராயிற்று. என்றது தலைவன் இவற்றைக் களவிலுங் கற்பிலுங் காத்தலும் வரைவிடைவைத்துப் பிரிந்தும் பரத்தையிற் பிரிந்துங் காவாமையுமுடைய னென்பது கூறிற்று. அவை எழுவகையான் (207) தோழி அவற்றைக் காத்து அறத்தொடு நிற்ப, அதனைச் செவிலி உட்கொண்டு அவற்றைக் காத்து நற்றாய்க் கறத்தொடு நிற்ப, அவளும் அவற்றை உட்கொண்டு காத்தற்கு அறத்தொடு நிற்றலும் உடன்போயது அறனென நற்றாய் கோடலுஞ் செவிலி பிறரை வரைகின்றானோ வெனத்
|