நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2733
Zoom In NormalZoom Out


 

பகற்பொழுதின்கண்ணுந் தலைவனைக்  குறியிடத்து  வருக  வெனத்
தோழி கூறலும்:

“வல்வில் இளையரொ டெல்லிச் செல்லாது
சேர்ந்தனை செலினே சிதைகுவ துண்டோ
பெண்ணை யோங்கிய வெண்மணற் படப்பை
அன்றில் அகவும் ஆங்கண்
சிறுகுரல் நெய்தலெம் பெருங்கழி நாட்டே”     (அகம்.120)

எனவும்,

“பூவேய் புன்னையந் தண்பொழில்
வாவே தெய்ய மணந்தனை செலற்கே”        (அகம்.240)

எனவும் வரும்.

களவு அறிவுறுமென்று  அஞ்சாது   வருகவென்றலின்  வழுவேனுந்
தலைவி வருத்தம் பற்றிக் கூறலின் அமைத்தார்.

கிழவோன்றன்னை   வாரல்   என்றலும் -  தோழியுந்  தலைவியுந்
தலைமை செய்துகொண்டு தலைவனை வாரற்க என்று கூறுதலும்:

தலைமை வழுவேனும் அன்பான் அமைத்தார்.

“இரவு வாரல் ஐய விரவுவீ
அகலறை வரிக்குஞ் சாரல்
பகலும் பெறுதியிவள் தடமேன் றோளே.”        (கலி.49)

இஃது, இரவுவாரலென்றது.

“பகல்வரிற் கவ்வை யஞ்சுதும்”               (அகம்.118)

என்றது பகல்வாரலென்றது.

“நல்வரை நாட நீவரின்
மெல்லிய லோருந் தான்வா ழலளே.”          (அகம்.112)

இஃது, இரவும் பகலும் வாரலென்றது.

நன்மையும்     தீமையும்  பிறிதினைக்  கூறலும்  -  பிறிதொரு
பொருண்மேல் வைத்து நன்மையுந், தீமையுந் தலைவற்கேற்பக் கூறலும்:

“கழிபெருங் காதலர் ஆயினுஞ் சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்”         (அகம்.111)

எனப்  பிறர்மேல் வைத்துத் தலைவனை அறிவுகொளுத்தினமையின்
வழுவாயமைந்தது.

“பழியொடு வரூஉ மின்பம் வெஃகார்”

எனவே   புகழொடு   வரூஉம் இன்பம் வெஃகுவரெனக்  கொள்ள
வைத்தலின் நன்மையுந் தீமையும் பிறிதின்மேல் வைத்துக் கூறிற்றாம்.

புரைபட   வந்த  அன்னவை  பிறவும்  -  வழுப்படவந்த  இவை
போல்வன பிறவும்:

அவை     ஊடற்கணின்றியுந் தலைவனைக் கொடியனென்றலும்
நொதுமலர்    வரைகின்றாரென்றலும்   அன்னை   வெறியெடுக்கின்றா
ரென்றலும் பிறவுமாம்.

“பகையில்நோய் செய்தான்”                   (கலி.40)

என்பது ஊடற்கணின்றிக் கொடியனென்றது.

“திணையுண் கேழ லிரிய” என்னும் (119) நற்றிணையுள்,

“யாவதும் முயங்கல் பெறுகுவ னல்லன்
புலவி கொளீஇயர்தன் மலையினும் பெரி