|
“பசலையா லுணப்பட்டுப் பண்டைநீர்
ஒழிந்தக்கால்”
(கலி.15)
என வரும்.
இதன்கட் சொல்வழுவன்றிச் செய்யா மரபிற் றொழிற் படுத்து அடக்கலும் அமைத்தார்.
இன்னும் உய்த்துக்கொண்டுணர்த (666) லென்பதனான் உண்ணப்படுதற்குரிய அல்லாத பொருளதனைப் பிறர் உண்ணப்பட்டதுபோலக் கூறலும் மரபாமென்பது பொருளாகக் கொள்க. அவை,
“தோள்நல முண்டு துறக்கப் பட்டோர்
வேள்நீர் உண்ட குடையோ ரன்னர்;
நல்குநர் புரிந்து நலனுணப் பட்டோர்
அல்குநர் போகிய வூரோ ரன்னர்:
கூடினர் புரிந்து குணனுணப் பட்டோர்
சூடின ரிட்ட பூவோ ரன்னர்.”
(கலி.23)
என வரும். பிறவுங் கொள்க.
உம்மையாற் பிற தொழில்பற்றி வருவனவுங் கொள்க.
“கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவையென்னைத்
தின்னும் அவர்க்காண லுற்று”
(குறள்.1244)
“புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு”
(குறள்.1187)
“வருத்தி வான்றோய் வற்றே காமம்”
(குறுந்.102)
என்றாற் போல்வனவுங் கொள்க.
(19)
வரைவு நேராமைக்குக் காரணம் பொருள்வேண்டி
எனத் தோழி கூறல்
214. பொருளென மொழிதலும் வரைநிலையின்றே
காப்புக் கைமிகுத லுண்மை யான.
இது களவின்கண் தோழிக் குரியதொரு வழுவமைக்கின்றது.
(இ-ள்.)
பொருள் என மொழிதலும் வரைநிலை இன்றே - எமர் வரைவு நேராமைக்குக் காரணம் பொருள் வேண்டியெனத் தோழி கூறலும் நீக்குநிலைமையின்று, காப்புக் கைம்மிகுதல் உண்மையான - காவன் மிகுதியான் தலைவிக்கு வருத்தம் கைகடத்த லுண்டாகையான் எ-று.
உம்மையாற் பொருளேயன்றி ஊருங் காடும் மலையும் முதலியன வேண்டுவரென்றலுங் கொள்க.
“சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது
வான்றோய் வன்ன குடிமையும் நோக்கித்
திருமணி வரன்றுங் குன்றங் கொண்டிவள்
வருமுலை யாகம் வழங்கின் நன்றே
யஃதான்று,
அடைபொருள் கருதுவிர் ஆயிற் குடையொடு
கழுமலந் தந்த நற்றேர்ச் செம்பியன்
பங்குனி விழவின் வஞ்சியோ
டுள்ளி விழவின் உறந்தையுஞ் சிறிதே.”
(நற்.)
இதனுட் பொருள் விரும்பியவாறுங் குன்றம் விரும்பியவாறுங் காண்க.
|