நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2741
Zoom In NormalZoom Out


 

தற்கு   மனஞெகிழ்ந்தாளெனவும்,  அவனை  என்னோடு  கூட்டுதற்கு
என்னை  வேறுநிறுத்தித் தானும் ஆயமும் வேறுநின்று நகுவே மெனக்
கூறினாளெனவுந்,   தலைவி   நாண்   நீங்காமைக்குக்   காரணமாகிய
பொருளை  உள்ளடக்கிப்  புணர்த்துக்  கூறியவாறு  காண்க.  இதனுள்
அறக்கழிவான  பொருள் புலப்படவும், ஏனைப்பொருள் புலப்படாமலுங்
கூறாக்கால்    தலைவியது   மறையை   வெளிப்படுத்தினாளாமாதலின்
அதனை   ‘மிக்கபொரு’  ளென்றார்.  ஏனையவற்றிற்கும்  உட்பொருள்
புணர்த்தவாறுணர்ந்து பொரு ளுரைத்துக் கொள்க.              (25)

எல்லா என்னுஞ்சொல் இருபாற்குமுரித்தெனல்

220. முறைப்பெயர் மருங்கிற் கெழுதகைப் பொதுச்சொல்
நிலைக்குரி மரபின் இருவீற்றும் உரித்தே.

இது,  கிழவன் கிழத்தி பாங்கன் பாங்கியென்னு முறைப் பெயராகிய
சொற்பற்றிப் பிறந்ததொரு வழுவமைக்கின்றது;

(இ-ள்.)     முறைப்பெயர் மருங்கிற் கெழுதகைப் பொதுச் சொல் -
முறைப்பெயரிடத்து  இருபாற்கும் பொருந்தின தகுதியையுடைய எல்லா
வென்னுஞ்  சொல்;  நிலைக்கு  உரிமரபின்  இருவீற்றும்  உரித்தே  -
புலனெறிவழக்கிற்குரிய  முறைமையினானே  வழுவாகாது ஆண்பாற்கும்
பெண்பாற்கும் ஒப்ப உரியதாய் வழங்கும் எ-று.

‘கெழுதகை’   யென்றதனானே தலைவியுந் தோழியுந் தலைவனைக்
கூறியதே    பெரும்பான்மையென்றுந்    தலைவன்   தலைவியையும்
பாங்கனையுங் கூறுதல் சிறுபான்மை வழுவமைதியென்றுங் கொள்க.

உ-ம்:

“அதிர்வில் படிறெருக்கி வந்தென் மகன்மேல்
முதிர்பூண் முலைபொருத ஏதிலாள் முச்சி
உதிர்துகள் உக்கநின் ஆடை யொலிப்ப
எதிர்வளி நின்றாய்நீ செல்;
இனி யெல்லா”                              (கலி.81)

எனத் தலைவியைத் தலைவன்  விளித்துக்கூறலின்  வழுவா யமைந்தது.

“எல்லாநீ,
முன்னத்தான் ஒன்று குறித்தாய்போற் காட்டினை
நின்னின் விடாஅ நிழல்போல் திரிதருவாய்
என்நீ பெறாத தீதென்.”                       (கலி.61)

எனத் தோழி தலைவனை விளித்துக்கூறலின் வழுவாயமைந்தது.