|
மூர்க் கடும்பாம்பு வழங்குந் தெருவில்
நடுங்கஞர் எவ்வங் களைந்த வெம்மே.”
(குறுந்.354)
இதனுள் ‘இல்லறத்தின் நீ துறந்தாயாயின் எம்மை எம் மூர்க்கண்ணே விடுக’வெனத் தனக்கு வருத்தந் தோன்றிற்றாகத் தோழி கூறியவாறு காண்க.
“உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயுந்
தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி
விழவொடு நின்றாய் நீயே யிஃதோ
ஓரா வல்சிச் சீரில் வாழ்க்கைப்
பெருநலக் குறுமகள் வந்தென
இனிவிழ வாயிற் றென்னுமிவ் வூரே.”
(குறுந்.295)
இதனுள் ஓரா “வல்சி” யொடு முன்னர் நிகழ்த்திய வாழ்க்கை இவன் வந்தானாகப் புறத்து விளையாடும் விழவுள தாயிற்றென்று. இவ்வூர் கூறாநிற்குஞ் செல்வம் இவளை ஞெகிழ்ந்தாற் பழைய தன்மையாமென்று அறிவர் இரங்கிக் கூறியவாறு காண்க.
“துறைமீன் வழங்கும்” (அகம்.316) என்பதனுள்,
“அதுபுலந் துறைதல் வல்லி யோரே”
எனப் புலவியான் நின் இல்வாழ்க்கை குறைபடுமெனத் தோழி கூறியவாறு காண்க.
இன்னும் உய்த்துக்கொண்டுணர்தலென்பதனான் ஏனைப் பிரிவான் நிகழும் வருத்தமிகுதியைக் குறித்தவிடத்து உயிர் வாழ்க்கையின் இரக்கமுரித்தென மொழிப என்றும் பொருள் கூறிச்,
“செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை”
(குறள்.1151)
எனவும்,
“அன்பற மாறியா முள்ளத் துறந்தவள்
பண்பு மறிதிரோ வென்று வருவாரை
என்றிறம் யாதும் வினவல் வினவிற்
பகலின் விளங்குநின் செம்மல் சிதையத்
தவலருஞ் செய்வினை முற்றாம லாண்டோர்
அவலம் படுதலும் உண்டு”
(கலி.19)
எனவும் வருவன பிறவுங் கொள்க.
(32)
புலவியுள் தலைவற்குந் தலைவிக்குமுரிய நிலைமைகூறல்
227. மனைவி உயர்வுங் கிழவோன் பணிவும்
நினையுங் காலைப் புலவியு ளுரிய.
இது. கற்பினுள் தலைவற்குந்
தலைவிக்கும் எய்தியதொரு வழுவமைக்கின்றது.
(இ-ள்.)புலவியுள் மனைவி உயர்வும் - புலவிக் காலத்துத் தலைவன் பணிந்துழி உட்கும் நாணுமின்றித் தலைவி அதனை ஏற்றுக்கோடலும்: கிழவோன் பணிவும் - தலைவன் தலைமைக்கு மாறாகத் தலைவியைப் பணிதலும்; நினையுங்காலை உரிய
|