நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2749
Zoom In NormalZoom Out


 

கொள்க.

“நாலா றுமாறாய்”                        (நாலடி.383)

எனவும்,

“நின்ற சொல்லர் நீடுதோன் றினியர்”             (நற்.1)

எனவும் வரும்.

குற்றேவனிலையளாகிய     தலைவியைத்  தலைவன்  புகழ்தலாலும்
பெருநாணினளாகிய   தலைவி   கணவனைப்   பிறரெதிர்   புகழ்தலா
னும்வழுவாயிற்று.                                         (34)

இறைச்சிப்பொரு ளிதுவெனல்

229. இறைச்சி தானே பொருட்புறத் ததுவே.

இது,     தலைவிக்குந் தோழிக்கு முரியதொரு வழுவமைக் கின்றது.
இறைச்சியாவது   உள்ள   பொருள்   ஒன்றனுள்ளே   கொள்வதொரு
பொருளாகலானுஞ் செவ்வன் கூறப்படாமையானுந் தலைவன் கொடுமை
கூறும்வழிப் பெரும்பாண்மை பிறத்தலானும் வழுவாயிற்று.

(இ-ள்.)    இறைச்சிதானே - கருப்பொருட்கு நேயந்தான்; பொருட்
புறத்ததுவே  -  கூறவேண்டுவதொரு  பொருளின்  புறத்தே புலப்பட்டு
அதற்கு உபகாரப்படும் பொருட்டன்மை யுடையதாம் எ-று.

“இலங்கு மருவித் திலங்கு மருவித்தே
வானி னிலங்கு மருவித்தே தானுற்ற
சூள்பேணான் பொய்த்தான் மலை.”             (கலி.41)

சூளைப்     பொய்த்தானென்பதே கூறவேண்டும் பொருள். அதன்
புறத்தே இங்ஙனம் பொய்த்தான் மலையகத்து நீர்திகழ்வா னென்னென
இறைச்சிப்பொருள் தோன்றியவாறு காண்க. பிறவுமன்ன.          (35)

கருப்பொருளிற் பிறக்கும் பொருளுமுளவெனல்

230. இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே
திறத்தியன் மருங்கின் தெரியு மோர்க்கே.

இஃது, எய்தியது இகந்துபடாமற் காத்தது.

(இ-ள்.)     இறைச்சியிற்  பிறக்கும்  பொருளுமார்   உளவே  -
கருப்பொருள்      பிறிதொரு      பொருட்கு       உபகாரப்படும்
பொருட்டாதலேயன்றி    அக்   கருப்பொருடன்னுள்ளே   தோன்றும்
பொருளும்    உள;    திறத்து    இயல்    மருங்கின்   -   அஃது
உள்ளுறையுவமத்தின்   கூற்றிலே  அடங்குமாறுபோல  நடக்குமிடத்து;
தெரியுமோர்க்கு  - அவ்வுள்ளுறையுவமமன்று இஃது இறைச்சி யென்று
ஆராய்ந்துணரும் நல்லறிவுடையோர்க்கு எ-று.