|
ய்த இறைச்சியிற்பொருளே பயந்தவாறும்
இரண்டுலக்கையானும் பயன்
கொண்டாற்போல் ஐயன் பெயர்
பாடுதலாற் பயன்கொள்ளாமையின்
உள்ளுறையுவமமன்மையுங்
காண்க. உள்ளுறையுவம மாயின்,
“தன்பார்ப்புத் தின்னும் அன்பின் முதலையொடு
வெண்பூம் பொய்கைத்து அவனூ ரென்ப”
(ஐங்குறு.41)
என்றாற்போலத் தலைவன்கொடுமையுந் தலைவி பேதைமையும் உடனுவமங் கொள்ளாநிற்கும். இதுபற்றித் ‘தெரியு மோர்க்கே’ யென்றார். உம்மை இறந்தது தழீஇயிற்று.
(36)
பிரிவின்கண் இறைச்சியுள் அன்புசெய்தற்குரியவற்றைத்
தோழிகூறல் தலைவியை வற்புறுத்தற்கெனல்
231. அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டலும்
வன்புறை யாகும் வருந்திய பொழுதே.
இஃது, இறைச்சி முற்கூறியவற்றின் வேறுபட வருமென்கின்றது.
(இ-ள்.) வருந்திய பொழுதே - பிரிவாற்றாத காலத்து; இறைச்சியுள் அன்புறு தகுந சுட்டலும் - தோழி கருப்பொருள்களுள் தலைவன் அன்பு செய்தற்குத் தகுவனவற்றைக் கருதிக் கூறலும்; வன்புறை ஆகும் - வன்புறுத்தலாகும் எ-று.
“நசைபெரி துடையர் நல்கலும் நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழியவர் சென்ற வாறே.”
(குறுந்.37)
இதனுண் ‘முன்பே நெஞ்சகத்தன்புடையார் அதன் மேலே களிறு தன் பிடியின்
பெரும்பசி களைதற்கு மென்றோலையுடைய ஆச்சாவைப் பிளந்து
அந்நாரைப் பொளித்தூட்டும் அன்பினையுடைய அவர் சென்ற ஆறதனைக் காண்பர்காண்’ என்று அன்புறுதகுந கூறிப் பிரிவாற்றாதவளை வற்புறுத்தவாறு காண்க. நம்மேல் இயற்கையாக அன்பிலனென்று ஆற்றாளாவளென்று கருதாது இவளை ஆற்றுவித்தற் பொருட்டு இவ்வாறு கூறலின் வழுவாயமைந்தது.
“அரிதாய வறன்” (கலி.11) என்பது தோழி கூற்றன்மை உணர்க.
(37)
தலைவன் தலைவியைப் பாராட்டியவழி
அஃது அவன்பிரிவை யுணர்த்துமெனல்
232. செய்பொருள் அச்சமும் வினைவயின் பிரிவும்
மெய்பெற வுணர்த்துங் கிழவிபா ராட்டே.
இது, தலைவன் தலைவியைப் பாராட்டியவழி வருவதொரு வழுவமைக்கின்றது.
(இ-ள்.) கிழவி பாராட்டே - தலைவன் தலைவியைப் பாராட்டிய பாராட்டு; செய்பொருள் அச்சமும் - யாஞ் செய்யக் கருதிய பொருட்கு இவள் இடையூறாவள் கொலென்று தலைவன் அஞ்சிய அச்சத்தையும்; வினைவயின் பிரிவும் - தான் பொருள் செய்தற்குப் பிரிகின்றதனையும்; மெய் பெற உணர்த்தும் - ஒரு தலையாகத் தலைவிக்கு உணர்த்தும் எ-று.
அப்பாராட்டுக் கிழவிய தாகலிற் கிழவி பாராட்டென்றார்.
“நுண்ணெழின் மாமை”
(கலி.5)
என்பதனுட் கழிபெரு
நல்கலால் தலைவன் செய்பொருட்கஞ்சியவாறும் அவன் பிரியக்கருதி
|