|
237. இரந்து குறையுற்ற கிழவனைத் தோழி
நிரம்ப நீக்கி நிறுத்த லன்றியும்
வாய்மை கூறலும் பொய்தலைப் பெய்தலும்
நல்வகை யுடைய நயத்திற் கூறியும்
பல்வகை யானும் படைக்கவும் பெறுமே.
இது, தோழி தலைவனைக் கூறுவனவற்றுள்
வழுவமைவன கூறுகின்றது.
(இ-ள்.)
இரந்து குறையற்ற கிழவனை - இரந்துகொண்டு தன் காரியத்தினைக் கூறுதலுற்ற தலைவனை; தோழி நிரம்ப
நீக்கி நிறுத்தலன்றியும் - தோழி அகற்றுற ஏத்துமுறைமையின் தாழ்வின்றாக அகற்றி நிறுத்தலேயன்றியும்; வாய்மை கூறலும் - நுமது கூட்டத்தினை யான் முன்னே அறிவலென மெய்யாகக் கூறலையும்; பொய்தலைப் பெய்தலும் - அப் புணர்ச்சியில்லையென்று பொய்த்ததுணைத் தலைவன் மேற் பொய்யுரை பெய்துரைத்தலையும் அவன் வரைந்து கோடற் பொருட்டுச் சில பொய்களைக் கூற வேண்டுமிடங்களிலே பெய்துரைத்தலையும்; நல்வகையுடைய நயத்திற் கூறியும் - நல்ல கூறுபாடுடைய சொற்களை அசதியாடிக் கூறியும்; பல்வகையானும் படைக்கவும் பெறுமே - இக்கூறியவாறன்றி
வேறுபடப் புனைந்துரைக்கவும் பெறும் எ-று.
தோழி நீக்கலன்றியுங் கூறலையுந் தலைப்பெய்தலையும் படைக்கவும் பெறும். பல்வகையானும் படைக்கவும் பெறுமென வினைமுடிக்க. தோழி தலைவனொடு நயங்கருதுமாற்றான் அவனை நீங்குதல் ஏனைய வற்றோடெண்ணாது அன்றியுமெனப் பகுத்துரைத்தார். ஏனைக்குறை முடித்தற்கு இடையூறின்மை கூறியனவும் வரைவு
கடாய்க் கூறியனவுமாம்.
“நெருநலு முன்னா ளெல்லையு.....
....................... மகளே.”
இது சேட்படுத்தது.
“எமக்கிவை யுரையல் மாதோ நுமக்கியான்
யாரா கியரோ பெரும வாருயிர்
ஒருவிர் ஒருவிர்க் காகி முன்னாள்
இருவீர் மன்னும் இசைந்தனிர் அதனால்
அயலே னாகிய யான்
முயலேன் போல்வன் நீமொழிபொருட் டிறத்தே.”
இது வாய்மை கூறியது.
|