நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3156
Zoom In NormalZoom Out


வகை       யகத்திணையுள்    உரிமைவகையான்    நிலம்பெறுவன
இவையெனவும்    அந்நிலத்திடைப்    பொதுவகையான்   நிகழ்வன
கைக்கிளை  பெருந்திணை  பாலை  யெனவுங்  கூறலானும், அவற்றுட்
பாலைத்திணை    நிலவகையான்    நடுவணதெனப்பட்டு   நால்வகை
யொழுக்கம்        நிகழா       நின்றுழி       அந்நான்கனுள்ளும்
பிரிதற்பொருட்டாய்த்தான்  பொதுவாய் நிற்குமெனக் கூறலானும், முதல்
கரு    உரிப்பொருளும்    உவமங்களும்   மரபும்   பொதுவகையாற்
கூறப்படுதலானும்,  பிறவும்  இன்னோரன்ன  பொதுப் பொருண்மைகள்
கூறலானுமென்பது. இங்ஙனம் ஓதிய அகத்திணைக்குச்  சிறப்பிலக்கணம்
ஏனை ஓத்துக்களாற் கூறுப.

ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியுங் கூடுகின்ற காலத்துப் பிறந்த
பேரின்பம்,      அக்கூட்டத்தின்      பின்னர்      அவ்விருவரும்
ஒருவருக்கொருவர்    தத்தமக்குப்   புலனாக   இவ்வாறிருந்ததெனக்
கூறப்படாததாய்,     யாண்டும்    உள்ளத்    துணர்வே   நுகர்ந்து
இன்பமுறுவதொரு  பொருளாதலின் அதனை அகம் என்றார். எனவே
அகத்தே நிகழ்கின்ற இன்பத்திற்கு அகமென்றது ஓர் ஆகுபெயராம்;

இதனை ஒழிந்தன, ஒத்த அன்புடையார்தாமே யன்றி எல்லாார்க்குந்
துய்த்துணரப்  படுதலானும்,  இவை  இவ்வாறிருந்த வெனப் பிறர்க்குக்
கூறப்படுதலானும்,   அவை  புறமெனவே  படும்.  இன்பமே  யன்றித்
துன்பமும்  அகத்தே  நிகழுமாலெனின், அதுவும் காமங் கண்ணிற்றேல்
இன்பத்துள்  அடங்கும்.  ஒழிந்த துன்பம் புறத்தார்க்குப் புலனாகாமை
மறைக்கப்படாமையிற்      புறத்திணைப்      பாலதாம்.      காமம்
நிலையின்மையான் வருந் துன்பமுந் ‘தாபதநிலை’ ‘தபுதாரநிலை’ யென
வேறாம்.   திணையாவது   ஒழுக்கம்;  இயல்:  இலக்கணம்;  எனவே,
அகத்திணையியலென்றது     `   இன்பமாகிய       ஒழுக்கத்தினது
இலக்கணமென்றவாறாயிற்று. இவ்வோத்துக்கள் ஒன்றற்கொன்று