நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3157
Zoom In NormalZoom Out


இயைபுடைமை அவ்வவ்வோத்துக்களுட் கூறுதும்.

இனி,  இச் சூத்திரம்   என்னுதலிற்றோ  வெனிற்  கூறக்  கருதிய
பொருளெல்லாந் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்: கைக்கிளை  முதலா - கைக்கிளை யெனப் பட்ட
ஒழுக்கம் முதலாக; பெருந்திணை இறுவாய் - பெருந்திணை யென்னும்
ஒழுக்கத்தினை   இறுதியாகவுடைய   ஏழனையும்;  முற்படக்  கிளந்த
எழுதிணை  என்ப  -  முற்படக் கூறப்பட்ட அகத்திணை யேழென்று
கூறுவர் ஆசிரியர் எ-று.

எனவே,       பிற்படக்       கூறப்பட்ட      புறத்திணையும்
ஏழுளவென்றவாறாயிற்று.   எனவே,   இப்பதினான்கு மல்லது வேறு
பொருளின் றென வரையறுத்தாராயிற்று. அகப்புறமும் அவை தம்முட்
பகுதியாயிற்று.    முதலும்   ஈறும்  கூறித்   திணை   யேழெனவே
‘நடுவணைந்திணை’ உளவாதல் பெறுதும். அவை மேற் கூறுப.

கைக்கிளை     யென்பது  ஒருமருங்கு  பற்றிய கேண்மை. இஃது
ஏழாவதன் தொகை. எனவே,ஒருதலைக் காமமாயிற்று. எல்லாவற்றினும்
பெரிதாகிய   திணை   யாதலின்   பெருந்திணையாயிற்று. என்னை?
எண்வகை  மணத்தினுள்ளும்  கைக்கிளை  முதல்  ஆறு  திணையும்
நான்கு   மணம்   பெறத்  தானொன்றுமே  நான்கு  மணம் பெற்று
நடத்தலின்.   பெருந்திணையிறுவாய்  -  பண்புத்தொகைப்  புறத்துப்
பிறந்த    அன்மொழித்தொகை.   முற்படக்   கிளந்தவென  எடுத்த
லோசையாற் கூறவே, பிற்படக் கிளந்த ஏழுதிணை யுளவாயின. அவை
வெட்சி,  வஞ்சி,  உழிஞை,  தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்திணை
என வரும்.

ஒழிந்தோர் பன்னிரண்டென்றாராதலிற்   புறத்திணை   யேழென்ற
தென்னையெனின், அகங்கை இரண்டுடையார்க்குப்