நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3187
Zoom In NormalZoom Out


இருவகை  வேனிலும்  பாலைக்  கண் வந்தன. நண்பகலொடு வருவன
வந்துழிக் காண்க.                                         (9)

பாலைக்குப் பிண்பனியும் உரித்தெனல்
 

10. பின்பனி தானும் உரித்தென மொழிப.
இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி.
 

(இ-ள்)  நடுவுநிலைத்  திணைக்கு    முற்கூறிய    வேனிலன்றிப்
பின்பனிக்காலமும் உரித்து எ-று.

இது     கூதிரை,      முன்பனியாகிய    மார்கழியுந்    தையுந்
தொடர்ந்தாற்போல, வேனிலாகிய  சித்திரை  முதலிய நான்கற்கு முன்
பின்பனியாகிய மாசியும் பங்குனியுந் தொடர்ந்தவென்று கூறினார்.

உ-ம்:

‘‘பகைவென்று திறைகொண்ட பாய்திண்டேர் மிசையவர்
வகைகொண்ட செம்மனாம் வனப்பார விடுவதோ
புகையெனப் புதல்சூழ்ந்து பூவங்கட் பொதிசெய்யா
மூகைவெண்ப னுதிபொர முற்றிய கடும்பனி.’’   
(கலி.31)

இது தனித்தோர்க்குப்  பின்பனி ஆற்றற்கு அரிது, இஃதெவர்க்கும்
ஏதமாம் எனவும், இதனான் இறந்துபடுவே னெனவுங் கூறிற்று.

‘‘அம்ம வாழி தோழி காதலர்
நூலறு முத்திற் றண்சித ருறைப்பத்
தாளித் தண்பவர் நாளா மேயும்
பனிபடு நாளே பிரிந்தனர்
பிரியு நாளும் பலவா கவ்வே’’
            (குறுந். 104)

தலைவி தோழிக்கு உரைத்தது.

இதுவும் அது.

பின்பனிக்கு  நண்பகல்  துன்பஞ்செய்யா  தென்பதூஉம், அதற்குச்
சிறுபொழுது வரைவில வென்பதூஉங் கூறிற்று;  என்னை? சூத்திரத்துத்
‘தான்’ எனத் தனித்து வாங்கிக் கூறினமையின். (10)

பாலைப்பகுதியும் அவற்றிற்குப் பின்பனி உரித்தெனலும்
 

11. இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றினும்
உரிய தாகும் என்மனார் புலவர்.
 

இது  பாலைப் பகுதி இரண்டெனவும் அவ்விரண்டற்கும்  பின்பனி
உரித்தெனவுங் கூறுகின்றது.