நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3343
Zoom In NormalZoom Out


தோன் போர்செய்தலை விரும்பிய உள்ளத்தைக் காத்தலும்;

நொச்சியாவது காவல். இதற்கு நொச்சி ஆண்டுச் சூடுதலுங் கொள்க;
அது   மதிலைக்காத்தலும்   உள்ளத்தைக்   காத்தலுமென  இருவர்க்கு
மாயிற்று.   இக்கருத்தானே  ‘‘நொச்சி வேலித்   தித்த  னுறந்தை’’
(அகம்.122) என்றார் சான்றோரும்.

உ-ம்:

‘‘இருகன்றி னொன்றிழந்த வீற்றாப்போற் சீறி
யொருதன் பதிசுற் றொழியப் - புரிசையின்
வேற்றரணங் காத்தான் விறல்வெய்யோன் வெஞ்சினத்துக்
கூற்றரணம் புக்கதுபோற் கொன்று’’

இஃது அகத்துழிஞையோன் எயிற்காத்த நொச்சி.

‘‘தாய்வாங்கு கின்ற மகனைத் தனக்கென்று
பேய்வாங்கி யன்னதோர் பெற்றித்தே - வாய்வாங்கு
வெல்படை வேந்தன் விரும்பாதா ரூர்முற்றிக்
கொல்படை வீட்டுங் குறிப்பு.’’

 (பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு.1328.எயில்கோடல்7)

இது புறத்தோன் மனங்காத்த நொச்சி.

‘‘மணிதுணர்ந் தன்ன மாக்குர னொச்சிப்
போதுவிரி பன்மர னுள்ளுஞ் சிறந்த
காத னன்மர நீமற் றிசினே
கடியுடை வியனகர்க் காண்வரப் பொலிந்த
தொடியணி மகளி ரல்குலுங் கிடத்தி
காப்புடைப் புரிசை புக்குமா றழித்தலி
னூர்ப்புறங் கொடாஅ நெடுந்தகை
பீடுகெழு சென்னிக் கிழமையு நினதே’’
        (புறம்.272)

இது சூடின நொச்சியைப் புகழ்ந்தது.

மற்று  அதன் புறத்தோன் வீழ்ந்த புதுமையானும் - இடைமதிலைக்
காக்கின்ற  அகத்துழிஞையோன்  நின்ற  இடத்தினைப் பின்னை அம்
மதிலின்    புறத்திருந்தோன்    விரும்பிக்கொண்ட    புதுக்கோளும்,
அங்ஙனம்   புறத்தோன்   கொண்ட   அவ்விடத்தினைப்   பின்னை
யகத்தோன் தான் விரும்பிக்கொண்ட புதுக்கோளும்;

பிற்பட்டதுறைக்குப்   புறத்தோன் அதனையென மாற்றிப் பொருள்
கொள்க.  முன்னர்ப்  புறமதிலின் போர்போல இடை மதிலினும் போர்
கூறினார்.

உ-ம்:

‘‘வெஞ்சின வேந்த னெயில்கோள் விரும்பியக்கா
லஞ்சி யொதுங்காதார் யார்யாவர் - மஞ்சுசூழ்
வான்றோய் புரிசை பொறியு மடங்கின
வான்றோ ரடக்கம்போ லாங்கு’’

 (பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு.1329.எயில்கோடல்8)

இது புறத்தோன் வீழ்ந்த புதுமை.

‘‘தாக்கற்குப் பேருந் தகர்போன் மதிலகத்
தூக்க முடையோ ரொதுங்கியுங் - கார்க்க
ணிடி புறப் பட்டாங் கெதிரேற்றார் மாற்றா
ரடிபிறக் கீடு மரிது’’

       (தகடூர்யாத்திரை.புறத்திரட்டு.1341.எயில்காத்தல் 7)

இஃது அகத்தோன் வீழ்ந்த புதுமை.

நீர்ச்     செரு வீழ்ந்த பாசியும் - கொண்ட மதிலகத்தை விட்டப்
போகாத  புறத்தோரும்  அவரைக்  கழியத்  தாக்கல் ஆற்றாத அகத்
தோரும் எயிற்புறத்து அகழின் இருகரையும் பற்றி நீரிடைப் ப