நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3354
Zoom In NormalZoom Out


றலும் பிறவுமாம்.

உ-ம்:

‘‘மாயத்தாற் றாக்கு மலையு மலையும்போற்
காயத்தூ றஞ்சாக் களிற்றொடும்போய்ச் - சாயுந்
தொலைவறியா வாடவருந் தோன்றினார் வான்மேன்
மலையுறையுந் தெய்வம்போல் வந்து.’’

                          (பெரும்பொருள்விளக்கம் 
                   புறத்திரட்டு.1401.யானை மறம்.14)

‘‘கையது கையோ டொருதுணி கோட்டது
மொய்யிலைவேன் மன்னர் முடித்தலை - பைய
வுயர்பொய்கை நீராட்டிச் செல்லுமே யெங்கோன்
வயவெம்போர் மாறன் களிறு.’’

இவை யானைநிலை.

‘‘பல்லுருவக் காலின் பரியுருவத் தாக்கித்தன்
றொல்லை யுருவிழந்த தோற்றம்போ - லெல்லா
மொருகணத்துத் தாக்கி யுருவிழந்த பாய்மாப்
பொருகளத்து வீழ்ந்து புரண்டு’’

‘‘மாவா ராதே மாவா ராதே
எல்லார் மாவும் வந்தன வெம்மிற்
புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த
செல்வ னூரு மாவா ராதே
யிருபேர் யாற்ற வொருபெருங் கூடல்
விலங்கிடு பெருமரம் போல
வுலந்தன்று கொல்லவன் மலைந்த மாவே’’
    (புறம்.273)

‘‘பருத்தி வேலிச் சீறூர் மன்ன
னுழுத்தத ருண்ட வோய்நடைப் புரவி
கடன்மண்டு தோணியிற் படைமுகம் போழ
நெய்ம்மிதி யருந்திய கொய்சுவ லெருத்திற்
றண்ணடைமன்னர் தாருடைப் புரவி
யணங்குடை முருகன் கோட்டத்துக்
கலந்தொடா மகளிரி னிகழ்ந்துநின் றவ்வே.’’
  (புறம்.299)

இவை குதிரைநிலை.

‘‘நிலம் பிறக்கிடுவது போல’’ என்னும்(303) புறப்பாட்டும்  அது.

இவை தனித்து வாராது தொடர்நிலைச் செய்யுட்கண் வரும்.அவை
தகடூர்யாத்திரையினும்  பாரதத்தினுங் காண்க. புறநானூற்றுள் தனித்து
வருவனவுங் கொள்க.

வேன்மிகு வேந்தனை மொய்த்தவழி  ஒருவன் தான் மீண்டெறிந்த
தார்நிலை    -   தன்படை  போர்செய்கின்றமை   கண்டு   தானும்
படையாளர்க்கு   முன்னேசென்று   வேலாற்  போர்செய்து  வென்றி
மிகுகின்ற     வேந்தனை    மாற்றோர்   சூழ்ந்துழி,    அதுகண்டு
வேறோரிடத்தே பொருகின்ற தன் றானைத் தலைவனாயினும் தனக்குத்
துணைவந்த அரசனாயினும்  போரைக் கைவிட்டு வந்து வேந்தனொடு
பொருகின்றாரை எறிந்த தார்நிலைக்கண்ணும்;

தாரென்பது  முந்துற்றுப்   பொரும்படையாதலின்   இது    தார்
நிலையாயிற்று.

உ-ம்:

‘‘வெய்யோ னெழாமுன்னம் வீங்கிருள் கையகலச்
செய்யோ னொளிதிகழுஞ் செம்மற்றே - கையகன்று
போர்தாங்கு மன்னன்முன் புக்குப் புகழ்வெய்யோன்
றார்தாங்கி நின்ற தகை.‘‘
                        
(பெரும்பொருள்விளக்கம்.
                    புறத்திரட்டு.1363.தானைமறம்.4)

என வரும்.

நிரப்பாது கொடுக்கும்’’என்னும் (180) புறப்பாட்டினுள் ‘‘இறையுறு
விழுமந் தாங்கி’’ என்பதும் அது.