நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3382
Zoom In NormalZoom Out


தன்னுயிரையும்   கொடுத்துக்  காத்தலும், அதன்  வருத்தந்  தனதாக
எண்ணி   வருந்துதலும்,  பொய்யாமை  கள்ளாமை  முதலியனவுமாம்.
இக்கருத்து   நிகழ்ந்த  பின்னர்த்  துறவுள்ளம்  பிறத்தலின்  இதுவும்
அறவெற்றியாயிற்று.

உ-ம்:

‘‘புனிற்றுப் பசியுழந்த புலிப்பிணவு தனாது
முலைமறாக் குழவி வாங்கி வாய்மடுத்
திரையெனக் கவர்வுற நோக்கி யாங்க
ஏரிளங் குழவியின் முன்சென்று தானக்
கூருகிர் வயமான் புலவுவேட்டுத் தொடங்கிய
வாளெயிற்றுக் கொள்ளையிற் றங்கினன் கதுவப்
பாசிலைப் போதி மேவிய பெருந்தகை
யாருயிர் காவல் பூண்ட
பேரருட் புணர்ச்சியி னகலு மாறே’’

‘‘தன்னுயிர்க் கின்னாமை தானறிவா னென்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்’’
              (குறள்.318)

‘‘வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல்’’
                  (குறள்.291)

‘‘களவென்னுங் காரறி வாண்மை யளவென்னு
மாற்றல் புரிந்தார்க ணில்’’
               (குறள்.287)

‘‘யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன்’’
                   (குறள்.341)

ஏனையவும் இதன்கண் அடக்குக.

காமம் நீத்த பாலினானும் - அங்ஙனம் பிறந்தபின்னர் எப்பொருள்
களினும் பற்றற்ற பகுதியானும்;

உ-ம்:

‘‘காமம் வெகுளி மயக்க மிவைமூன்றின்
நாமங் கெடக் கெடு நோய்’’
              (குறள்.360)

என வரும்.

பாலென்றதனான்  உலகியலு  ணின்றே காமத்தினைக்  கைவிட்ட
பகுதியுங் கொள்க.

‘‘இளையர் முதிய ரெனவிருபால் பற்றி
விளையு மறிவென்ன வேண்டா - விளையனாத்
தன்றாதை காம நுகர்தற்குத் தான்காம
மென்றாது நீத்தா னுளன்.’’

                         (பெரும்பொருள்விளக்கம்.
                  புறத்திரட்டு.542.அறிவுடைமை-15)

என வரும்.

என்று இருபாற்பட்ட ஒன்பதிற்றுத் துறைத்தே.முன்னர்  ஒன்பானும்
பின்னர்  ஒன்பானுமாக  இரண்டு கூறுபட்ட ஒன்பதாகிய பதினெட்டுத்
துறையினையுடைத்து வாகை எ-று.

இதனுள்   ஏது   விரியாதனவற்றிற்கும்   ஏது   விரித்தவாற்றான்
இருபாற்பட்ட பதினெட்டாத லுடைத்தென முடிக்க.             (21)

காஞ்சி பெருந்திணையது புறனாதல்
 

77. காஞ்சி தானே பெருந்திணைப் புறனே.
 

இத்துணையும்   உரிப்பொருள் பெற்ற அகத்திணைக்குப் புறங்கூறி,
இஃது  உரிப்பொருளல்லாத பெருந்திணைக்குப் புறனிது வென்கின்றது.
இதனை   வாகைக்குப்  பின்வைத்தார்.  வீரக்குறிப்பு   நிலையாமைக்
குறிப்போ