நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3457
Zoom In NormalZoom Out


கல்வயல்
அரிவன ரரிந்துந் தருவனர் பெற்றுந்
தண்சேறு தாஅய மதனுடை நோன்தாள்
கண்போ னெய்தல் போர்விற் பூக்குந்
திண்டேர்ப் பொறையன் தொண்டி
தன்திறம் பெறுகவிவ ளீன்று தாயே.”
            (நற்.8)

என்பதும்  அது.  ஏனையற்றிற்குச்  சான்றோர்  செய்யுட்கள் வருவன
உளவேற் காண்க.

பெற்றவழி   மகிழ்ச்சியும் - சொல்லிய  நுகர்ச்சி வல்லே பெற்றுழி
அவன்  மனம்  மகிழும்  மகிழ்ச்சியும்;  பேராச் சிறப்பினென்றதனாற்
பாங்கனான் நிகழும் இடந்தலைப்பாட்டிற்கும் இது கொள்க.

உ-ம்:

“ஒடுங்கீ ரோதி யொண்ணுதற் குறுமகள்
நறுந்தண் ணீர ளாரணங் கினளே
இனைய ளென்றவட் புனையளவு அறியேன்
சிலமெல் லியவே கிளவி
அணைமெல் லியள்யான் முயங்குங் காலே”
    (குறுந்.70)

என வரும்.

பிரிந்தவழிக்   கலங்கலும் - அங்ஙனம் புணர்ந்து பிரிந்துழி அன்பு
மிகுதியான்  தான்  மறைந்து  அவட்  காணுங்கால்  ஆயத்திடையுஞ்
சீறூரிடையுங் கண்டு இனிக் கூடுதல் அரிதென இரங்கலும்.

உ-ம்:

“குணகடல் திரையது பறைதபு நாரை
திண்டேர்ப் பொறையன் தொண்டிமுன்துறை
அயிரை ஆரிரைக்கு அணவந் தாஅங்குச்
சேய ளரியோட் படர்தி
நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே”
       (குறுந்.128)

“இல்லோ னின்பங் காஅமுற் றாஅங்
கரிதுவேட் டனையால் நெஞ்சே காதலி
நல்ல ளாகுத லறிந்தாங்
கரிய ளாகுத லறியா தோயே”
              (குறுந்.120)

என வரும்.

‘வழி’ யென்றதனாற் பிரியலுறுவான் கூறுவனவுங் கொள்க.

“வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கு மிடத்து.”            
(குறள்.1124)

இது    மூன்றாங் கூட்டத்தினையுங்கருதலின் ஈண்டுவைத்தார். இது
முதலாகப்   பாங்கற்கூட்டமாம்.  கலங்கலுமெனவே   அக்கலக்கத்தான்
நிகழ்வனவெல்லாங்    கொள்க.    அவை    தலைவன்   பாங்கனை
நினைத்தலும்   அக்  கலக்கங்  கொண்டு  பாங்கன்  வினாவுவனவும்
அதுவே பற்றுக்கோடாக உற்றதுரைத்தலும் பிறவுமாம்.

உ-ம்:

“பண்டையை யல்லைநீ யின்று பரிவொன்று
கொண்ட மனத்தை யெனவுணர்வல் - கண்டாயால்
நின்னுற்ற தெல்லாம் அறிய வுரைத்தியால்
பின்னுற்ற நண்பினாய் பேர்த்து.”

எனவும்,

“வஞ்சமே யென்னும் வகைத்தாலோர் மாவினாய்த்
தஞ்சந் தமியனாய்ச் சென்றேனென் - னெஞ்சை
நலங்கொண்டார் பூங்குழலாள் நன்றாயத் தன்றென்
வலங்கொண்டாள் கொ