|
ளற் கரிதே.” (குறுந்.58)
இவை நிகழ்பவை உரைத்தன.
இப் பன்மையான் வேறுபட வருவனவெல்லாங் கொள்க.
குற்றங் காட்டிய வாயில் பெட்பினும் - அங்ஙனந் தலைவற்கு நிகழுங் குற்றங்களை வெளிப்படக் காட்டிய பாங்கன் அவன் ஆற்றாமை மிகுதி கண்டு அதனை நீக்குதற்கு விரும்பினும்:
அது நின்னாற் காணப்பட்ட உரு எவ்விடத்து எத்தன்மைத்து என வினாவும். உ-ம்:
“பங்கய மோ துங்கப் பனிதங்கு மால்வரையோ அங்கண் விசும்போ அலைகடலோ - வெங்கோவின் செவ்வண்ண மால்வரையே போலுந் திருமேனி இவ்வண்ணஞ் செய்தார்க் கிடம்.”
என வரும். அது கேட்டுத்
தலைவன் கழியுவகை மீதூர்ந்து இன்னவிடத்து இத்தன்மைத்து என்னும். உ-ம்:
“கழைபா டிரங்கப் பல்லியங் கறங்க ஆடுமகள் நடந்த கொடும்புரி நோன்கயிற்று அதவத் தீங்கனி யன்ன செம்முகத் துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்கக் கழைக்க ணிரும்பொறை யேறி விசைத்தெழுந்து குறக்குறு மாக்க டாளங் கொட்டுமக் குன்றகத் ததுவே குழுமிளைச் சீறூர் சீறூ ரோளே நாறுமயிர்க் கொடிச்சி கொடிச்சி கையகத் ததுவேபிறர் விடுத்தற் காகாது பிணித்தவென் னெஞ்சே.” (நற்.95)
இஃது இடங்கூறிற்று.
“கேளிர் வாழியோ கேளிர் நாளும்என் நெஞ்சு பிணிக்கொண்ட அஞ்சில் ஓதி பெருநா ணணிந்த சிறுமெல் லாகம் ஒருநாள் புணரப்புணரின் அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே.”
(குறுந்.280)
இது தன்மை கூறிற்று.
மீட்டுங் ‘குற்றங் காட்டிய’ என்றதனானே இக்கூட்டத்திற்குரிய கூற் றாகிச் சான்றோர் செய்யுட்கண் வேறுபட வருவன வெல்லாங் கொள்க.
“காயா ஈன்ற கணவீ நாற்றம் மாயா முன்றில் வருவளி துரக்கும் ஆகோள் வாழ்நர் சிறுகுடி யாட்டி வேயேர் மென்றோள் விலக்குநர் யாரோ வாழிநீ அவ்வயிற் செலினே.”
இது பாங்கனை நீ யாண்டுச் செல்ல வேண்டுமென்றது.
“என்னுறுநோய் தீர்த்தற் கிருபிறப்பி னான்மறையோன் தன்னுறுநோய் போலத் தளர்கின்றான்-இன்னினிய சுற்றத்தின் தீர்ந்த சுடரிழையைச் செவ்வியான் தெற்றெனக் கண்ணுறுங்கொ லென்று.” (பாரதம்)
இது குறிவழிச்சென்ற பா
|