வற்குக் கூறுவனவும்
இடங்காட்டுவனவுஞ் சான்றோர் செய்யுளுள் வரும்வழிக் காண்க. ஆண்டுச் சென்ற தலைவன் இடந்தலைப்பாட்டிற் கூறியவாற்றானே கூடுதல்கொள்க. அங்ஙனம் கூடிநின்று அவன் மகிழ்ந்து கூறுவனவும் பிறவுங்கொள்க.
“வேட்ட பொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள்.”
“எமக்குநயந் தருளினை யாயிற் பணைத்தோள் ஒண்ணுத லரிவையொடு மென்மெல இயலி வந்திசின் வாழியோ மடந்தை தொண்டி யன்னநின் பண்புபல கொண்டே” (ஐங்குறு.175)
இது பாங்கற் கூட்டங்கூடி நீங்குந் தலைவன் நீ வருமிடத்து நின் தோழியொடும் வரல்வேண்டுமெனத் தலைவிக்குக்கூறியது.
“நெய்வளர் ஐம்பால் நேரிழை மாதரை மெய்ந்நிலை திரியா மேதகு சுற்றமோ டெய்துத லரிதென் றின்னண மிரங்கிக் கையறு நெஞ்சமொடு கவன்றுநனி பெயர்ந்தவென் பைத லுள்ளம் பரிவு நீக்கித் தெய்வத் தன்ன தெரியிழை மென்றோள் எய்தத் தந்த ஏந்தலொ டென்னிடை நற்பாற் கேண்மை நாடொறு மெய்த அப்பாற் பிறப்பினும் பெறுகமற் றெனக்கே.”
அங்ஙனங் கூடிநின்று தலைவன் பாங்கனை உண்மகிழ்ந்து உரைத்தது.
இவன் பெரும்பான்மை பார்ப்பானாம்.
இத்துணையும் பாங்கற் கூட்டம்.
பெட்டவாயில் பெற்று இரவு வலியுறுப்பினும் - அங்ஙனம் அவனைப் புணைபெற்றுநின்ற தலைவன் தலைவிக்கு வாயிலாதற்கு உரியாரை யாராய்ந்து பலருள்ளுந் தலைவியாற் பேணப்பட்டாள் தனக்கு வாயிலாந் தன்மையையுடைய தோழியை அவள் குறிப்பினான் வாயிலாகப் பெற்று இவளை இரந்துபின் னிற்பலென வலிப்பினும்:
மறைந்து தலைவியைக் கண்டு நின்றான் அவட்கு அவள் இன்றி யமையாமை கண்டு அவளை வாயிலெனத் துணியும். உ-ம்:
“தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும் கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும் புணைகை விட்டுப் புனலோ டொழுகின் ஆண்டும் வருகுவள்போலும் மாண்ட மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச் செவ்வெரிந் உறழுங் கொழுங்கடை மழைக்கண் துளிதலைத் தலைஇய தளிரன் னோளே.” (குறுந்.222)
இது தலைவி அவட்கு இனையளென்று கருதி அவளை வாயிலாக
|