வெள்ளம் நீந்தி அரிதவா உற்றனை நெஞ்சே என்றும் பெரிதால் அம்மநின் பூச லுயர்கோட்டு மகவுடை மந்தி போல அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.” (குறுந்.29)
“பணைத்தோட் குறுமகள் பாவை தைஇயும் பஞ்சாய்ப் பள்ளஞ் சூழ்ந்தும் மற்றிவள் உருத்தெழு வனமுலை ஒளிபெற வெழுதிய தொய்யில் காப்போ ரறிதலு மறியார் முறையுடை யரசன் செங்கோல் வையத் தியான்றற் கடவின் யாங்கா வதுகொல் பெரிதும் பேதை மன்ற அளிதோ தானேஇவ் வழுங்க லூரே.” (குறுந்.276)
“உரைத்திசிற் றோழியது புரைத்தோ வன்றே துருக்கங் கமழு மென்றோள் துறப்ப வென்றி இறீஇயரென் னுயிரே”
(சிற்றெட்டகம்)
என வரும். மடன்மாகூறும்இடனுமாருண்டே - அச்சேட்படையான் மடலே றுவலெனக் கூறும் இடனும் உண்டு என்றவாறு.
நோக்கி மடன்மா கூறுமென்க. உம்மையான் வரைபாய்வலெனக் கூறும் இடனும் உண்டென்றவாறு. உ-ம்:
“விழுத்தலைப் பெண்ணை விளையன் மாமடன் மணியணி பெருந்தார் மார்பிற் பூட்டி வெள்ளென் பணிந்துபிறர் எள்ளத் தோன்றி ஒருநாண் மருங்கிற் பெருநா ணீக்கித் தெருவி னியலவுந் தருவது கொல்லோ கலிழ்கவின் ரசைநடைப் பேதை மெலிந்தில ணாம்விடற் கமைந்த தூதே.” (குறுந்.182)
இது நெஞ்சொடு கிளத்தல்.
“நாணாக நாறு நனைகுழலாள் நல்கித்தன் பூணாக நேர்வளமும் போகாது - பூணாக மென்றே னிரண்டாவ துண்டோ மடன்மாமேல் நின்றேன் மறுகிடையே நேர்ந்து.” (திணை.நூற்.16)
இது தோழிக்குக் கூறியது.
இவை சாக்காடு குறித்தன.
“மாவென மடலும் ஊர்ப பூவெனக் குவிமுகிழ் எருக்கங் கண்ணியுஞ் சூடுப மறுகின் ஆர்க்கவும் படுப பிறிதும் ஆகுப காமங்காழ்க் கொளினே.” (குறுந்.17)
இதனுட் ‘பிறிதுமாகுப’ என்றது வரைபாய்தலை.
‘இட’ னென்றதனான் தோழி பெரியோர்க்குத் தகா தென்ற வழித் தலைவன் மறுத்துக் கூறுவனவும், பிறவும் வேறுபட வருவனவும் கொள்க.
“நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறு மடல்” (குறள்.1133)
எனவரும். இனி ‘இடனும்’ என்ற உம்மையைப் பிரித்து நிறீஇ இரு நான்கு கிளவியும் மகிழ்ச்சியுங் கலங்கலுங் கூறும் இடனும் உண்டு, உரைப்பினும் பெட்பினு முவப்பினு மிரப்பினும் வகையினும் கூறும் இடனும் உண்டு, பகுதிக்கண்ணும் மற்றைய வழிக்கண்ணுங் கூறும் இடனும் உண்டு, மெய்யுறக் கூறலும் பீடுங்கூறலும் உண்டென முடிக்க. (11)
இரந்து பின்னிற்புழித்தலைவன்கூற்று நிகழுமிடம் இவை எனல்
|