இஃது அன்புற்று நக்குழித் தலைவன் கூறியது.
அவட் பெற்று மலியினும் - தோழி உடம்பாடு பெற்று மனம் மகிழினும். உ-ம்:
“எமக்குநயந் தருளினை யாயின் பணைத்தோள் ஒண்ணுத லரிவையொடு மென்மெல இயலி வந்திசின் வாழியோ மடந்தை தொண்டி அன்னநின் பண்புபல கொண்டே.” (ஐங்குறு.175)
இஃது அவட்பெற்று மலிந்து தலைவன் கூறியது.
இன்னும் ‘அவட்பெற்று மலியினும்’ என்றதற்கு,
இரட்டுற மொழித லென்றதனாற், றலைவியைப் பகற்குறியினும் இரவுக் குறியினும் பெற்று மகிழினும் என்று பொருளுரைக்க.
“நன்றே செய்த வுதவி நன்றுதெரிந்து யாமென் செய்குவம் நெஞ்சே காமர் மெல்லியல் கொடிச்சி காப்பப் பல்குரல் ஏனற் பாத்தருங் கிளியே.”
(ஐங்குறு.288) இது பகற்குறிக்கண் கிளி புனத்தின்கட் படிகின்றதென்று தலைவியைக் காக்க ஏவியதனை அறிந்த தலைவன், அவளைப் பெற்றேமென மகிழ்ந்து கூறியது.
“காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கும் மாணிழை கண்ணொவ்வே மென்று.” (குறள்.1144)
இஃது இரவுக்குறிக்கண் அவட்பெற்று மலிந்தது.
“கூறுவங் கொல்லோ கூறலங் கொல்லெனக் கரந்த காமம் கைந்நிறுக் கல்லாது நயந்துநாம் விட்ட நன்மொழி நம்பி அரைநாள் யாமத்து விழுமழை கரந்து கார்விரை கமழுங் கூந்தல் தூவினை நுண்ணூ லாகம் பொருந்தினள் வெற்பின் இளமழை சூழ்ந்த மடமயில் போல வண்டுவழிப் படரத் தண்மலர் வேய்ந்து வில்வகுப் புற்ற நல்வாங்கு குடச்சூல் அஞ்சிலம் பொடுக்கி யஞ்சினள் வந்து துஞ்சூர் யாமத்து முயங்கினள் பெயர்வோள் ஆன்ற கற்பிற் சான்ற பெரிய அம்மா வரிவையோ வல்லள் தெனாஅது ஆஅய் நன்னாட் டணங்குடைச் சிலம்பின் கவிரம் பெயரிய வுருகெழு கவாஅன் நேர்மலர் நிறைசுனை யுறையும் சூர்மகள் மாதோ என்னுமென் னெஞ்சே” (அகம்.198)
என வரும்.
“விண்ணகம் விளக்கல் வேண்டி நம்மிற் பிரியினும் பிரியுமோ பெருந்தோட் கொடிச்சி வானஞ் சூடிய திலகம் போல ஓங்கிரு விசும்பினுங் காண்டும் ஈங்குங் காண்டும் இவள்சிறு நுதலே.”
இதுவும் அது. ஆற்றிடை உறுதலும்
- தலைவன் செல்லும் நெறிக்கண் இடையூறு தோன்றின இடத்தும்:
என்றது, தலைவியுந் தோழியும் வருவழியருமை கூறிய வழித் தலைவன் கூற்று நிகழுமென்றவாறு. உ-ம்:
“குருதி வேட்கை யுருகெழு வய
|