நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3493
Zoom In NormalZoom Out


விந்து
இனிதடங் கினரே மாக்கண் முனிவின்று
நனந்தலை யுலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.”
              (குறுந்.6)

இதனுட்     பொழுது  சென்றதில்லையென்றும்,  மாக்கள் இன்னுந்
துயின்றிலரென்றும்   அருமையை   வாயில்   கூறியவழித்,   தலைவி
யாமமும்  நள்ளென்றும்  மாக்களுந் துயின்றும் வந்திலரென வருந்திக்
கூறியவாறு காண்க.

நாம்   ஏவிய   தொழில்   ஏற்றுக்கொண்டு  வருகின்றவன்,  ஒரு
காரணத்தானன்றி  வாராதொழியுமோ வென்று  தலைவி கொள்ளுமாறு
கூறுமென்றற்குத் தொழிலென்றார்.

கூறிய வாயில் கொள்ளாக் காலையும் - தலைவற்குக் குறை நேர்ந்து
வாயிலாகிக்    குறைநயப்பக்    கூறியவழியும்   பிறவழியுந்,   தோழி
கூற்றினைத்  தலைவி  ஏற்றுக்கொள்ளாத  காலத்துக்கண்ணும்: வாயில்,
தோழி.

உ-ம்:

“தெருவின்கட், காரணமின்றிக் கலங்குவார்க் கண்டுநீ
வாரண வாசிப் பதம்பெயர்த்தல் ஏதில
நீநின்மேற் கொள்வ தெவன்”
                (கலி.60)

எனத் தோழி கூற்றினை மறுத்தது.

“தோளே தொடி நெகிழ்ந் தனவே கண்ணே
வாளீர் வடியின் வடிவிழந் தனவே
நுதலும் பசலை பாயின்று திதலைச்
சில்பொறி அணிந்த பல்கா ழல்குன்
மணியே ரைம்பான் மாயோட் கென்று
வெவ்வாய்ப் பெண்டிர் கவ்வை தூற்ற
நாமுறு துயரஞ் செய்யல ரென்னுங்
காமுறு தோழி காதலங் கிளவி
யிரும்பு செய் கொல்லன் வெவ்வுலைத் தெளித்த
தோய்மடற் சின்னீர் போல
நோய்மலி நெஞ்சிற்கு ஏமமாஞ் சிறிதே.”      
(நற்.133)

இது தோழி கூற்றினை நன்கு மதியாது கூறினாள்.

மனைப்பட்டுக்     கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு நினைத்தல்
சான்ற அருமறை உயிர்த்தலும் - காப்பு மிகுதிக்கண் மனையகப்பட்டுக்
கலங்கி   உணர்வு  அழிந்தவழித்,  தலைவி  ஆராய்ச்சியுடைத்தாகிய
அருமறையினைத் தோழிக்குக் கூறுதலும் உள.

உ-ம்:

“கேளா யெல்ல தோழி யல்கல்
வேணவா நலிய வெய்ய வுயிரா
ஏமான் பிணையின் வருந்தினெ னாகத்
துயர்மருங் கறின்தனள் போல அன்னை
துஞ்சா யோஎன் குறுமக ளென்றலின்
சொல்வெளிப் படாமை மெல்லவென் நெஞ்சிற்
படுமழை பொழிந்த பாறை மருங்கின்
சிரல்வா யுற்ற தளவிற் பரலவற்
கான்கெழு நாடற் படர்ந்தோர்க்குக்
கண்ணும் படுமோ வென்றிசின் யானே.”
          (நற்.61)