நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3502
Zoom In NormalZoom Out


ஆங்கதை யறிவுறன் மறந்திசின் யானே.”      (அகம்.38)

இதனுள்     ஊசன்மாறுதலும்   புனமுந் தன்குறி தள்ளிய இடன்;
மறந்திசின்   என்றது  தெருளாக்காலை,   கூஉங்கண்ணது   ஊரென
உணர்த்தாமையின்;      இடையீடு      படுவதன்றி     அவன்கண்
தவறுண்டோவெனத்    தன்    பிழைப்பாகத்   தழீஇயினாள்.   இது
சிறைப்புறமாக வரைவுகடாயது.

வழுவின்றி  நிலைஇய இயற்படு பொருளினும் - வழுப்படுத்த லின்றி
நின்ற இயற்பட மொழிதற் பொருண்மைக் கண்ணும்:

வழுவின்றி     நிலைஇய  என்றதனான் தோழி இயற்பழித்துழியே
இயற்பட  மொழிவதென்க.  தலைவன்  வழுவைத் தோழி கூறியதற்குப்
பொறாது  தான்  இயற்பட  மொழிந்ததல்லது,  தன்  மனத்து  அவன்
பரத்தைமை கருதுதலுடைமையிற் பொருள் வேறு குறித்தாளாம்.

உ-ம்:

“அடும்பமல் நெடுங்கொடி உள்புதைந் தொளிப்ப
வெண்மணல் விரிக்குந் தண்ணந் துறைவன்
கொடியன் ஆயினும் ஆக
அவனே தோழியென் னுயிர்கா வலனே.”
  (ஐங்.பக்கம்.144)

“தொடிநிலை நெகிழச் சாஅய்த் தோளவர்
கொடுமை கூறின வாயினும் கொடுமை
நல்வரை நாடற்கில்லை தோழிஎன்
நெஞ்சிற் பிரிந்ததூஉ மிலரே தங்குன்ற
நோக்கங் கடிந்ததூஉ மிலரே
நிலத்தினும் பெரிதே நேர்ந்தவர் நட்பே”

என வரும்.

இஃது அகன்ற உயர்ந்து தாழ்ந்தவற்றின் பெரிதாகிய நட்புடையவன்
எனக்   கூறியது.   அவை   ஒருகாலைக்கு  ஒருகாற்  பெருகுமென்று
கூறினாளாயினும், நமது நட்புப்போல் ஒரு காலே பெருத்ததில்லையென
இரண்டுங் கூறினாள்.

பொழுதும்     ஆறும் புரைவது அன்மையின் அழிவு தலை வந்த
சிந்தைக்கண்ணும்  -  தலைவியுந்  தோழியும்  தலைவன்  இரவுக்குறி
வருங்காற்     பொழுதாயினும்     நெறியாயினும்     இடையூறாகிப்
பொருந்துதலின்மையின்,    அழிவு    தலைத்தலை   சிறப்ப   வந்த
ஆராய்ச்சிக்கண்ணும்:

ஆண்டும் அவ்விரண்டும் நிகழும்.

உ-ம்:

“மன்றுபா டவிந்து மனைமடிந் தன்றே
கொன்றோ ரன்ன கொடுமையோ டின்றே
யாமங் கொளவரிற் கனைஇக் காமங்
கடலினு முரைஇக் கரைபொழி யும்மே
எவன்கொல் வாழி தோழி மயங்கி
யின்ன மாகவு நன்னர் நெஞ்சம்
என்னொடும் நின்னொடுஞ் சூழாது கைம்மிக்கு
இறும்புபட் டிருளிய இட்டருஞ் சிலம்பிற்
குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக்
கான நாடன் வரூஉம் யானைக்
கயிற்றுப் புறத்தன்ன கன்மிசைச் சிறுநெறி
மாரி வானந் தலைஇ நீர்வார்பு
இட்டருங் கண்ண படுகுழி யியவின்
இருளிடை மிதிப்புழி நோக்கியவர்
தளரடி தாங்கிய சென்ற தின்றே.”
          (அகம்.128)

காமங்  கரைபொழியா நிற்கவும் என்ன நன்றி கருதி இருவரொடுஞ்
சூழாது  சென்றது  நெஞ்சென  இரண்டுங்  கூறினாள். மனைமடிந்தன்
றென்பது