இடம் பலவுந் தொகுத்துக் கூறுகின்றது. (இ-ள்.)
நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும் செய்வினை மறைப்பும் செலவும் பயில்வும் - தலைவன் பெட்ட வாயில் பெற்று இரவுவலியுற்று முன்னுறு புணர்ச்சியை உரைப்பின் இன்னது நிகழுமென்று அறியாது அஞ்சிக் கரந்து மதியுடம்படுப்பத் தோழி மதியுடம்படுங்கால் அவள் ஆராயும் ஆராய்ச்சி யெல்லாம் நாட்டமாம்; அஃது எட்டாம். அவற்றுள் முன்னுறு புணர்ச்சியை உணர்த்தற்குக் காரணம் எழுவகைய, அவை நாற்ற முதலிய ஏழும்: நாற்றமாவது, ஓதியும் நுதலும் பேதைப் பருவத்துக்குத் தக நாறாது தலைவன் கூட்டத்தான் மான்மதச்சாந்து முதலியனவும் பல பூக்களும் விரவி நாறுதல். தோற்றமாவது,
நீண்டும் பிறழ்ந்தும் பிள்ளைப்பருவத்து வெள்ளை நோக்கின்றி
உள்ளொன்று கொள்ள நோக்குங் கண்ணுந், தந்நிலை திரிந்து துணைத்து மெல்கிப் பணைத்துக் காட்டுந் தோளும் முலையுமென்று இன்னோரன்ன. ஒழுக்கமாவது,
பண்ணையாயத்தொடு முற்றிலான் மணற் கொழித்துச் சோறமைத்தல் முதலியன
முனிந்த குறிப்பினளாய்ப் பெண்டன்மைக்கு ஏற்ப ஒழுகுதல். உண்டியாவது, பண்டு பால் முதலிய கொண்டு ஒறுத்து ஊட்ட உண்டு
வருகின்றாள், இப்பொழுது ஆசாரமும் நாணுங் காதலும் மீதூர அதன்மேல் உவப்பு ஆண்டு இன்றி மிக ஒறுத்த உள்ளத்தளாதல். செய்வினை மறைத்தலாவது,
முன்பு போலாது இக்காலத்து நினைவுஞ் செயலுந் தலைவனொடு பட்டனவே யாகலான் அவை பிறர்க்குப் புலனாகாமை மறைத்தல்; அஃது ஆயத்தொடு கூடாது இடந்தலைப்பாட்டிற்கு ஏதுவாக நீங்கி நிற்றலாம். செலவாவது,
பண்டுபோல் வேண்டியவாறு நடவாது சீர்பெற நடந்து ஓரிடத்துச் சேறல். பயில்வாவது,
செவிலி முலையிடத்துத் துயில் வேண்டாது பெயர்த்து வேறோரிடத்துப் பயிறல். இன்சாரியை. புணர்ச்சி எதிர்ப்பாடு - எதிர்ப்பாட்டுப் புணர்ச்சியென மாறுக. அது கொடுப்பாரும் அடுப்பாருமின்றி இருவருந்தமியராய் எதிர்ப் பட்டுப் புணரும் புணர்ச்சி. இவ்வொழுக்கம் பாங்கற் கூட்டத்திற்கு ஏதுவாகாது. உள்ளுறுத்து
வரூஉம் உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை - அப்புணர்ச்சி
யெதிர்ப்பாடு
நிகழ்ந்ததனைத் தோழி தன்னுள்ளத்துள்ளே வினாவி வருகின்ற ஐயவுணர்வினை அவ்வேழனானுந் தெளிந்து புணர்ச்சி உண்டென்பதனை உணர்ந்த பின்றை: இன்னதும் இன்னதுமாகிய ஏழென்க. அங்ஙனந் துணி
|