நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3516
Zoom In NormalZoom Out


கூறிக்     குறைவுற்று   நிற்கின்றான்   ஒருவனுளன் அவனை நீயுங்
காண்டல்  வேண்டு  மெனவும்,  அவன் என்னைத் தழுவிக் கொண்டு
குறைகூறவும்  யான்  மறுத்து  நின்றேனென்றாற்  போலவும் மெய்யும்
பொய்யும் விராயும் பிறவாறாகவுங் கூறுவன பல்வேறு கவர்பொருளாம்.

உ-ம்:

“முன்னுந் தொழத்தோன்றி முள்ளெயிற்றா யத்திசையே
இன்னுந் தொழத்தோன்றிற் றீதேகாண் - மன்னும்
பொருகளிமால் யானைப் புகார்க்கிள்ளி பூண்போற்
பெருகொளியான் மிக்க பிறை.”

இது பண்டு கூறியவாறு கூறலின் மெய்யும், பிறைதொழாமை அறிந்து
கூறலிற் பொய்யுமாய் வழிநிலை பிழையாத கவர்பொருளாயிற்று.

“பண்டிப் புனத்துப் பகலிடத் தேனலுட்
கண்டிக் களிற்றை யறிவன்மன் - தொண்டிக்
கதிரன் பழையனூர்க் கார்நீலக் கண்ணாய்
உதிர முடைத்திதன் கோடு.”
            (சிற்றெட்டகம்)

இது  நடுங்க  நாட்டம்; இஃது இறந்துபாடு பயத்தலிற் கந்தருவத்திற்கு
அமையாது.

“தொய்யில் வனமுலையுந் தோளுங் கவினெய்தித்
தெய்வங் கமழுமால் ஐம்பாலும் - ஐயுறுவல்
பொன்னங் கொடிமருங்குற் பூங்கயற் கண்ணினாய்க்
கென்னை இதுவந்த வாறு”

என     வழிநிலை  பிழையாமற்  கவர்பெருளாக  நெறிபடுநாட்டம்
நிகழ்ந்தவழித்  தலைவி சுனையாடினேற்கு இங்ஙனம் ஆயிற்றென்னும்.
அது கேட்டுத் தோழியும் யானும் ஆடிக் காண்பல் என்னும்.

உ-ம்:

“பையுண் மாலைப் பழுமரம் படரிய
நொவ்வுப்பறை வாவல் நோன்சிற கேய்க்கும்
மடிசெவிக்குழவி தழீஇப் பெயர்தந்து
இடுகுகவுண் மடப்பிடி யெவ்வங் கூர
வெந்திற லாளி வெரீஇச் சந்தின்
பொரியரை மிளிரக் குத்தி வான்கேழ்
உருவ வெண்கோ டுயக்கொண்டு கழியுங்
கடுங்கண் யானை காலுற வொற்றலிற்
கோவா ஆரம் வீழ்ந்தெனக் குளிர்கொண்டு
பேஎ நாறுந் தாழ்நீர்ப் பனிச்சுனை
தோளா ரெல்வளை தெளிர்ப்ப நின்போல்
யானு மாடிக் காண்கோ தோழி
வரைவயிறு கிழித்த சுடரிலை நெடுவேல்
திகழ்புண் முருகன் தீம்புன லலைவாய்க்
கமழ்பூம் புறவிற் கார்பெற்றுக் களித்த
வொண்பொறி மஞ்ஞை போல்வதோர்
கண்கவர் காரிகை பெறுதலுண்டெனினே”

என வரும்.

“நெருந லெல்லை யேனல் தோ