குத்த வுழவர் போல இரந்தோர் வறுங்கலம் மல்க வீசிப் பாடுபல அமைத்துக் கொள்ளை சாற்றிக் கோடுயர் திணிமணல் துஞ்சுந் துறைவ பெருமை யென்பது கெடுமோ வொருநாள் மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத் தண்ணறுங் கானல் வந்துநும் வண்ணம் எவனோ வென்றனிர் செலினே.”
(அகம்.30) இதனால் தம்மான் இடையூறெய்தி வருந்துகின்றானை ஒருநாள் வந்திலிரென மாயஞ் செப்பியவாறும், நீர் வாராமையின் வண்ணம் வேறுபடுமென ஏற்றுக்கோடுமெனக் காரணங் கூறியவாறுங் காண்க. தம்மேல் தவறின்றாகக் கூறுங்காலத்து இது கூறுவரென்றற்குக் ‘குறித்த காலை’ யென்றார். புணர்ந்தபின்
அவன்வயின் வணங்கற்கண்ணும் - அக்கூட்டத்தின் பின் முற்காலத்துப் பணிந்து பின்னின்றோனைத் தோழி தானே பணிந் தொழுகுமிடத்தும்: உ-ம்: “இவளே, நின்சொற் கொண்ட வென்சொல் தேறிப் பசுநனை ஞாழல் பல்கிளை யொருசிறைப் புதுநல னிழந்த புலம்புமா ருடையள் உதுக்காண் தெய்ய உள்ளல் வேண்டும் நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக் கடலுங் கானலும் தோன்றும் மடல்தாழ் பெண்ணையெஞ் சிறுநல் லூரே”
(குறுந்.81) ‘வாங்கு கோனெல்லொடு’ என்னுங் குறிஞ்சிக்கலியுள், “அரவின் பொறியு மணங்கும் புணர்ந்த உரவுவில் மேலசைத்த கையை யொராங்கு நிரைவளை முன்கையென் றோழியை நோக்கிப் படிகிளி பாயும் பசுங்குர லேனல் கடிதன் மறப்பித்தா யாயி னினிநீ நெடிதுள்ள லோம்புதல் வேண்டும்...”
(கலி.50) எனவும், “கடுமா கடவுறூஉங் கோல்போ லெனைத்துங் கொடுமையிலை யாவ தறிந்தும் அடுப்பல் வழைவளர் சாரல் வருடை நன்மான் குழவி வளர்ப்பவர் போலப் பாராட்டி யுழையிற் பிரியிற் பிரியு மிழையணி யல்குலென் றோழியது கவினே.”
(கலி.50) எனவும் வரும். இத்துணையும் ஒரு கூட்டங் கூறினார். குறைந்து அவட் படரினும் - தலைவன் இரந்து பின்னின்றமை கண்டு தோழி மனம் ஞெகிழ்ந்து தான் குறைநேர்ந்து தலைவியிடத்தே சென்று குறைகூறினும்: உ-ம்: “வளையணி முன்கை வாலெயிற் றின்னகை யிளைய ராடுந் தளையவிழ் கானல் விருந்தென வினவி நின்ற நெடுந்தோ ளண்ணற் கண்டிகும் யாமே.”
(ஐங்குறு.198) என வரும். மறைந்தவள் அருக - நாண் மிகுதியான் தன
|