நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3552
Zoom In NormalZoom Out


கியமும் அக்காலத்து உள வென்றுணர்க.                     (26)

தலைவிக்குரியதோரிலக்கண முரைத்தல்
 

118.தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல்
எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லைப்
பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப்
பெய்ந்நீர் போலு முணர்விற் றென்ப.

 

இது தலைவிக்கு உரியதோர் இலக்கணங் கூறுகின்றது.

(இ-ள்)    பிறநீர்  மாக்களின்  -  வேறுவேறாகத்  தம்மில்  தாம்
காதல்செய்து  ஒழுகும்  அறிவில்லாதாரைப்  போல;  கிழவன் அறியத்
தன்னுறு  வேட்கை  முற்கிளத்தல்  கிழத்திக்கு  இல்லை  - தலைவன்
அறியும்படியாகத்  தனக்குற்ற வேட்கையை அவன்  முன்னர்க் கூறுதல்
தலைவிக்கு  இல்லை;  ஆயிடை  -  அங்ஙனங்  கூற்றில்லாதவிடத்து;
எண்ணுங்   காலையும்  -  அவள்  வேட்கையை  அவன்  ஆராயுங்
காலையும்;  பெய்நீர்  போலும்  உணர்விற்று  என்ப  - அவ்வேட்கை
புதுக்கலத்துப்  பெய்த  நீர்  புறத்துப்  பொசிந்து காட்டுமாறு போலும்
உணர்வினையுடைத் தென்று கூறுவர் ஆசிரியர் எ-று.

‘கிழத்திக்கில்லை’     யெனவே   தோழிக்குத்   தலைவி  தனது
வேட்கையை  எதிர்நின்று  கூறுதலுளதென்பது பெற்றாம். தலைவிக்குக்
குறிப்பானன்றித்  தலைவன்முன்னின்று கூறும்  வேட்கைக் கூற்றின்மை
முற்கூறிய   செய்யுட்களுட்   காண்க.   தோழிமுன்னர்த்  தலைவிக்கு
வேட்கைக்கூற்று நிகழ்தற்கு.

உ-ம்:

“சேணோன் மாட்டிய நறும்புகை”            (குறுந்.150)

“ஈயற்புற்றத் தீர்ம்புறத் திறுத்த”              (அகம்.8)

என்பனவும்,

“இவளே நின்சொற்கொண்ட”                (குறுந்.81)

என்றாற்போல் வருவனவும் முன்னர்க் காட்டினாம்.

“கடும்புனன் மலிந்த காவிரிப் பேரியாற்று
நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுநள் போல
நடுங்கஞர் தீர முயங்கி நெருநல்
ஆகம் அடைதந் தோளே”
             (அகம்.62,9-12)

என்றாற்போல்வன   தலைவி  வேட்கையைத்  தலைவன்  குறிப்பான்
உணர்ந்தன.
                                            (27)

தலைவனுந் தலைவியும் தாமே தூதுவராதலு முரித்தெனல்
 

119.காமக் கூட்டந் தனிமையிற் பொலிதலின்
தாமே தூதுவ ராதலு முரித்தே.
 

இஃது  எய்தாதது     எய்துவித்தது,     பாங்கனுந்    தோழியும்
நிமித்தமாகவன்றித் தாமே தூதாகும் இடமும் உண்டென்றலின்.

(இ-ள்)     காமக்கூட்டந்  தனிமையிற் பொலிதலின் -  இயற்கைப்
புணர்ச்சியும்   இடந்தலைப்பாடுங்   கூட்டுவாரையின்றித்  தனிமையாற்
பொலிவு  பெறுதலின்; தாமே தூதுவர் ஆகலும் உரித்தே - ஒருவருக்கு
ஒருவர் தூதுவராகி ஒருவர் ஒருவரைக் கூடுதலும் ஆண்டுரித்து எ-று.

அது   மெய்ப்பாட்டினுட்  ‘புகமுகம்  புரிதன்’   (261)   முதலிய
பன்னிரண்டானும்