நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3569
Zoom In NormalZoom Out


றோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி ஆய்கழற்
செயலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே.”
       (குறுந்.15)

இதனுள் ‘வாயாகின்று’ எனச் செவிலி நற்றாய்க்குக் கூறினமையானும்
‘விடலை’யெனப்  பாலை நிலத்துத் தலைவன் பெயர் கூறினமையானும்
இது கொடுப்போரின்றிக் கரணம் நிகழ்ந்தது. “அருஞ்சுர மிறந்தவென்
பெருந்தேள் குறுமகள்”
(அகம்.195) என்பதும் அது.            (2)

அந்தணர் முதலிய மூவர்க்கும் புணர்ந்த கரணம்
வேளாளர்க்குரியவான காலமு முண்டெனல்
 

144.மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங்
கீழோர்க் காகிய காலமு முண்டே.
 

இது   முதலூழியில்   வேளாளர்க்கு   உரியதோர்    இலக்கணங்
கூறுகின்றது.

(இ-ள்)   மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் - வேதநூல்தான்
அந்தணர்  அரசர்  வணிக  ரென்னும்  மூவர்க்கும் உரியவாகக் கூறிய
காரணம்;   கீழோர்க்கு   ஆகிய   காலமும்   உண்டு  -  அந்தணர்
முதலியோர்க்கும்  மகட் கொடைக்குரிய வேளாண் மாந்தர்க்குந் தந்திர
மந்திர வகையான் உரித்தாகிய காலமும் உண்டு எ-று.

எனவே,  முற்காலத்து நான்கு வருணத்தார்க்குங் கரணம்  ஒன்றாய்
நிகழ்ந்தது    என்பதாம்.    அஃது    இரண்டாம்    ஊழிதொடங்கி
வேளாளர்க்குத்    தவிர்ந்தது    என்பதூஉந்    தலைச்சங்கத்தாரும்
முதனூலாசிரியர்   கூறிய   முறையே   கரணம்  ஒன்றாகச்  செய்யுள்
செய்தார்   என்பதூஉங்   கூறியவாறாயிற்று.  உதாரணம்  இக்காலத்து
இன்று.                                                  (3)

பொய்யும் வழுவுந் தோன்றியபின் கரணங் கட்டப்பட்டதெனல்
 

145. பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.
 

இது வேதத்திற் கரணம்  ஒழிய ஆரிடமாகிய கரணம் பிறந்தவாறும்
அதற்குக் காரணமுங் கூறுகின்றது.

(இ-ள்)     பொய்யும்  வழுவுந் தோன்றிய பின்னர் - ஆதி ஊழி
கழிந்த   முறையே   அக்காலத்தந்தந்  தொடங்கி  இரண்டாம்  ஊழி
முதலாகப்  பொய்யும்  வழுவுஞ் சிறந்து தோன்றிய பிற்காலத்தே; ஐயர்
யாத்தனர்  கரணம்  என்ப  - இருடிகள் மேலோர் கரணமும்  கீழோர்
கரணமும் வேறுபடக் காட்டினாரென்று கூறுவர் எ-று.

ஈண்டு   ‘என்ப’  (249)   என்றது  முதனூலாசிரியரையன்று,  வட
நூலோரைக்  கருதியது.  பொய்யாவது  செய்த  ஒன்றனைச் செய்திலே
னென்றல்;  வழுவாவது  சொல்லுதலே  அன்றி   ஒழுக்கத்து  இழுக்கி
ஒழுகல்.