நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3662
Zoom In NormalZoom Out


கொல்   எனின்  அல்லது - இவை என்ன வருத்தமுற்றனகொலென்று
தனக்கு  வருத்தமில்லது போலக் கூறினல்லது ; கிழத்திக்குக் கிழவோற்
சேர்தல் இல்லை - தலைவிக்குத் தலைவனைத் தானேசென்று சேர்தல்
இருவகைக் கைகோளினுமில்லை எ-று.

இது,   காதல்கூரவுங் கணவற்சேராது வஞ்சம்போன்  றொழுகலின்
வழுவாயினும் அமைக்க எ-று.

“எற்றோ வாழி தோழி முற்றுபு
கறிவளர் அடுக்கத்து இரவின் முழங்கிய
மங்குல் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க்
கலைதொட இழுக்கிய பூநாறு பலவுக்கனி
வரையிழி யருவி உண்துறைத் தரூஉங்
குன்ற நாடன் கேண்மை
மென்றோள் சாய்த்துஞ் சால்பீன் றன்றே.”
    (குறுந்.90)

என்பதனுட்     கேண்மை  தோளை மெலிவித்ததாயினும் எனக்கு
அமைதியைத் தந்தது ; யான் ஆற்றவுந் தாம் மெலிதல் பொருந்தாதது
எத்தன்மைத்தெனத்  தலைவி  தோழிக்குக் கூறியவாறு காண்க. ‘கலை
தீண்ட  வழுக்கி  வீழ்ந்த  பழத்தை  யருவி  பின்னும்  பயன்படுத்து
நாடன்’   என்றதனானே  அலரால்  நஞ்சுற்றத்திற்  பிரிந்தேமாயினும்
அவன்    நம்மை    வரைந்துகொண்டு    இல்லறஞ்   செய்வித்துப்
பயன்படுத்துவ னென்பதாம்.

“கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.”               
(குறள்.1173)

இதுவும் அது.

“ஓஒஇனிதே யெமக்கிந்நோய் செய்தகண்
தாஅ மிதற்பட் டன.”
                   (குறள்.1176)

இதுவும் இதன்பாற்படும். இனி,

“இனிப்புணர்ந்த எழில்நல்லார் இலங்கெயிறு உறாஅலின்
நனிச்சிவந்த வடுக்காட்டி நாணின்றி வரினெல்லா
துனிப்பேன்யான் என்பேன்மன் அந்நிலையே
                                   அவற்காணில்
தனித்தே தாழுமித் தனியில் நெஞ்சே.”
        (கலி.67)

இதனுள். யான் துனித்தல்வல்லேன்,  என் நெஞ்சிற்குத் தன்றன்மை
யென்பதொன்றில்லை, ஈதென்னென்றலின் அவ்வாறு காண்க.      (9)

இதுவுமது
 

204, ஒருசிறை நெஞ்சமோ டுசாவுங் காலை
உரிய தாகலும் உண்டென மொழிப.
 

இதுவும் அது.

(இ-ள்)  ஒருசிறை -  தன் உள்ளத்து நின்ற தலைவனை யொழியப்
போந்துநின்றது;   நெஞ்சமொடு   உசாவுங்  காலை  -  தானுந்  தன்
நெஞ்சமும் வேறாக நின்ற கூட்டத்திற்கு உசாவுங் காலம்; உரியதாகலும்
உண்டென  மொழிப  -  தலைவிக்குரியதாகலும் உண்டென்று கூறுவர்
புலவர் எ-று,

உம்மையான் தோழியுடன் உசாவுங்காலமும் உண்டு என்று கொள்க.
உம்மை   எச்சவும்மை.   இது   தலைவனை  வேறுபடுத்துத்  தானும்
நெஞ்சமும் ஒன்றாய் நின்று உசாவுதலின் வழுவா