க்கின்றது. (இ-ள்.)
உண்டற்கு உரிய அல்லாப் பொருளை-உண்டற்றொழிலை நிகழ்த்துதற்குரிய அல்லாத பொருளை; உண்டன போலக் கூறலும் மரபே - அத்தொழிலை நிகழ்த்தினவாகப் புலனெறிவழக்கஞ் செய்தலும் மரபு எ-று. அது, “பசலையா லுணப்பட்டுப் பண்டைநீர் ஒழிந்தக்கால்”
(கலி.15) என வரும். இதன்கட்
சொல்வழுவன்றிச் செய்யா மரபிற் றொழிற் படுத்து அடக்கலும்
அமைத்தார். இன்னும் உய்த்துக்கொண்டுணர்த (666) லென்பதனான் உண்ணப்படுதற்குரிய அல்லாத பொருளதனைப் பிறர் உண்ணப்பட்டதுபோலக் கூறலும் மரபாமென்பது பொருளாகக் கொள்க. அவை, “தோள்நல முண்டு துறக்கப் பட்டோர் வேள்நீர் உண்ட குடையோ ரன்னர்; நல்குநர் புரிந்து நலனுணப் பட்டோர் அல்குநர் போகிய வூரோ ரன்னர்: கூடினர் புரிந்து குணனுணப் பட்டோர் சூடின ரிட்ட பூவோ ரன்னர்.”
(கலி.23) என வரும். பிறவுங் கொள்க. உம்மையாற் பிற தொழில்பற்றி வருவனவுங் கொள்க. “கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவையென்னைத் தின்னும் அவர்க்காண லுற்று”
(குறள்.1244) “புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு”
(குறள்.1187) “வருத்தி வான்றோய் வற்றே காமம்”
(குறுந்.102) என்றாற் போல்வனவுங் கொள்க.
(19) வரைவு நேராமைக்குக் காரணம் பொருள்வேண்டி எனத் தோழி கூறல்
|