நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3833
Zoom In NormalZoom Out


வாறு காண்க.  

இஃது,
  

‘‘இனிதுறு கிளவியுந் துனியுறு கிளவியு
முவம மருங்கிற் றோன்று மென்ப’’ 
                           (தொல். பொ. உவ. 28)
 

என உவமப்போலிக்குக் கூறுதலின் அவ்விரண்டுந் தோன்றி நின்றது.  

‘‘ஏனோர் கெல்லா மிடம்வரை வின்றே’’
                           (தொல். பொ. உவ. 27)
 

என்று உவமப்போலியிற் கூறுதலாற் காமக்கிழத்தியும் உள்ளுறையுவமங்
கூறினாள்.
  

குறிஞ்சியிலும்    மருதத்திலும்    நெய்தலிலும்    இவ்வாறு   வரும்
கலிகளும்,
  

‘‘யானே ஈண்டை யேனே யென்னலனே
யேனல் காவலர் கவணொடு வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீனெறி தூண்டிலி னிவக்கும்

கானக நாடனோ டாண்டொழிந் தன்றே’’      (குறுந்.54)
  

என்னும்     இக் குறுந்தொகைபோல வருவனவும்  இச்  சூத்திரத்தான்
அமைக்க.  பேராசிரியரும் இப்பாட்டின் ‘மீனெறி தூண்டி’லென்றதனை
ஏனையுவமமென்றார்.
  

இனித்     தள்ளாதென்றதனானே,   ‘‘பாஅ  லஞ்செவி’’  என்னும்
பாலைக்கலியுட்   (5)   டாழிசை  மூன்றும்   ஏனையுவமமாய்   நின்று
கருப்பொருளொடு   கூடிச்  சிறப்பியாது  தாமே   திணைப்   பொருள்
தோன்றுவித்து  நிற்பன  போல்வனவுங்,  ‘‘கரைசேர்  வேழங் கரும்பிற்
பூக்குந்  துறைகே  ழூரன்’’ (ஐங்குறு.12) என்றாற் போலக் கருப்பொருள்
தானே  உவமமாய்   நின்று உள்ளுறைப் பொருள் தருவனவும், பிறவும்
வேறுபட  வருவனவும்  இதனான் அமைக்க. இது புறத்திற்கும்  பொது.
இதனான் உள்ளுறையுவமமும், ஏனையுவமமு மென உவமம்  இரண்டே
யென்பது கூறினார்.                                       (46)
  

உள்ளுறையுவமம் தெய்வம் நீங்கலான ஏனைய
கருப்பொருளிடமாகப் பிறத்தல்

  

47.

உள்ளுறை தெய்வ மொழிந்ததை நிலனெனக்
கொள்ளும் என்ப குறியறிந் தோரே.
இது முறையே உள்ளுறையுவமங் கூறுகின்றது
 

(இ-ள்.) உள்ளுறை - உள்ளுறை யெனப்பட்ட  உவமம்;  தெய்வம்
ஒழிந்ததை  நிலன்  எனக்  கொள்ளும்  என்ப  -  தெய்வ   முதலிய
கருப்பொருளுட்  டெய்வத்தை  ஒழித்து  ஒழிந்த   கருப்பொருள்களே
தனக்குத்  தோன்றும் நிலனாகக் கொண்டு புலப்படுமென்று கூறுப; குறி
அறிந்தோரே - இலக்கணம் அறிந்தோர் எ-று.
  

எனவே,   உணவு     முதலிய    பற்றிய    அப்பொருணிகழ்ச்சி
பிறிதொன்றற்கு உவமையாகச் செய்தல் உள்ளுறையுவமமாயிற்று.
  

உ-ம்:

‘‘ஒன்றே னல்ல னொன்றுவென் குன்றத்துப்
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்
நின்றுகொய மலரு நாடனொ
டொன்றேன் றோழிமற் றொன்றி னானே’’     (குறுந்.208)
  

இக்  குறுந்தொகை,   பிறிதொன்றின்   பொருட்டுப்   பொருகின்ற
யானையான் மிதிப்புண்ட வேங்கை நசையற உணங்காது மலர்