நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3841
Zoom In NormalZoom Out


யுங்     கூறிற்று. இவை தேவ  பாணிக்கு  வருதலுங் கொச்சகக் கலி
பொருள்வேறுபடுதலுஞ்     செய்யுளியலுள்     வரைந்து    ஓதுதும்.
‘மக்கணுதலிய  அகனைந்திணையு’மென  (தொல்.  பொ.  அகத்.  54).
மேல்வரும்    அதிகாரத்தானும்,    இதனை    அகத்திணையியலுள்
வைத்தமையானும்.  அகனைந்திணை யாகிய காமப்பொருளே புலனெறி
வழக்கத்திற்குப் பொருளாமென் றுணர்க.
  

‘பாடல்   சான்ற’   என்றதனாற்   பாடலுள் அமைந்தனவெனவே,
பாடலுள்   அமையாதனவும்   உளவென்று   கொள்ளவைத்தமையிற்,
கைக்கிளையும் பெருந்திணையும் பெரும்பான்மையும் உலகியல் பற்றிய
புலனெறி    வழக்காய்ச்    சிறுபான்மை    வருமென்று    கொள்க.
செய்யுளியலுட்     கூறிய    முறைமையின்றி    ஈண்டுக்    கலியை
முன்னோதியது,   கலியெல்லாம்  ஐந்திணைப்  பொருளாய  புலனெறி
வழக்கிற்  காமமுங், கைக்கிளை பெருந்திணையாகிய உலகியலே பற்றிய
புலனெறி  வழக்கிற் காமமும் பற்றி வருமென்றற்கும், பரிபாடல் தெய்வ
வாழ்த்து   உட்படக்  காமப்பொருள்   குறித்து   உலகியலே   பற்றி
வருமென்றற்கும் என்றுணர்க.
  

ஆசிரியரும்   வெண்பாவும்    வஞ்சியும்    அகம்  புறமென்னும்
இரண்டற்கும்   பொதுவாய்   வருமாறு   நெடுந்தொகையும்   புறமுங்
கீழ்க்கணக்கும் மதுரைக்காஞ்சியும்  பட்டினப்பாலையும்  என்பனவற்றுட்
காண்க.  மருட்பாத்  ‘தானிது வென்னுந் தனிநிலை’ (தொ. பொ. செய்.
85) இன்மையின் வரைநிலையின்று.
  

‘‘மனைநெடு வயலை வேழஞ் சுற்றுந்
துறைகே ழூரன் கொடுமை நாணி
நல்ல னென்றும் யாமே
யல்ல னென்னுமென் றடமென் றோளே’’ (ஐங்குறு.11)
 
 

இதனுள்   முதல் கரு வுரிப்பொருளென்ற மூன்றுங் கூறலின் நாடக
வழக்குந்,  தலைவனைத்  தலைவி  கொடுமை  கூறல் உலகியலாகலின்
உலகியல்  வழக்கும்  உடன்கூறப்பட்டன. இவ்விரண்டுங் கூடிவருதலே
பாடலுட்   பயின்ற  புலனெறி  வழக்கமெனப்படும்.  இவ்விரண்டனுள்
உலகியல்  சிறத்தல்  ‘உயர்ந்தோர்  கிளவி  (தொ.  பொ.  பொரு. 23)
என்னும் பொருளியற் சூத்திரத்தானும் மரபியலானும் பெறுதும்.
  

‘‘முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழா