நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3850
Zoom In NormalZoom Out


வரும்   அவரேவலான்  நிரைகோடற்கும்  மீட்டற்கும்  உரியராயினர்;
ஆகவே  இருவர்க்குங்  கோடற்றொழில் உளதாயிற்றாதலின் அடித்துக்
கோடலும் மீட்டுக் கோடலும் வெட்சியாயின. ஆயின ‘மீட்டல் கரந்தை’
என்பரால்   எனின்,  அதனையும்  இச்   சூத்திரத்தானும்  வருகின்ற
சூத்திரத்தானும்  வெட்சியென்றே  ஆசிரியர்  கொண்டார்.  மீட்டலை
வெட்சிக் கரந்தை என்பாரும் உளர். மீட்டலைக் கரந்தை யென்பார்க்கு
அது   திணையாயிற்  குறிஞ்சிக்குப்  புறனாகாமை  உணர்க.  ‘களவி’
னென்பதற்கு        களவினானெனவுங்        களவின்கணெனவும்
இருபொருட்டாகக்    கூறுதல்   உய்த்துக்   கொண்டுணர்தலென்னும்
உத்தியாம்.  புறப்பொருட்குரிய  அறனும்  பொருளுங் கூறத்தொடங்கி,
ஈண்டு அறத்தாற் பொருளீட்டுமாறுங் கூறினார்.                 (2)
  

வெட்சித்திணைத்துறை பதினான்கும் இருபத்தெட்டு ஆதல் 
 

58.

படையியங் கரவம் பாக்கத்து விரிச்சி
புடைகெடப் போகிய செலவே புடைகெட
ஒற்றின் ஆகிய வேயே வேய்ப்புறம்
முற்றின் ஆகிய புறத்திறை முற்றிய
ஊர்கொலை யாகோள் பூசன் மாற்றே
நோயின் றுய்த்த னுவலுழித் தோற்றந்
தந்துநிறை பாதீ டுண்டாட்டுக் கொடையென
வந்த ஈரேழ் வகையிற் றாகும்.
 

இதுமுன்       ஈரேழாமென்ற      துறை,      இருவகைப்பட்டு
இருபத்தெட்டாமென்கின்றது.
  

(இ-ள்)  படை  இயங்கு  அரவம் - நிரைகோடற்கு  எழுந்த படை
பாடிப்புறத்துப்  பொருந்தும்  அரவமும், நிரைமீட்டற்கு எழுந்த  படை
விரைந்து செல்லும் அரவமும்;
 

உ-ம்:

‘‘வெவ்வாண் மறவர் மிலைச்சிய வெட்சியாற்
செவ்வானஞ் செல்வதுபோற் செல்கின்றா - ரெவ்வாயு
மார்க்குங் கழலொலி யாங்கட் படாலியரோ
போர்க்குந் துடியொடு புக்கு’’
(பெரும்பொருள்விளக்கம்.
புறத்திரட்டு.1236.நிரைகோடல்.5)  

‘‘அடியதி ரார்ப்பின ராபெயர்த்தற் கன்னாய்
கடிய மறவர் கதழ்ந்தார் - மடிநிரை
மீளாது மீளார் விறல்வெய்யோர் யாதாங்கொல்

வாளார் துடியர் வளம்’’
             (புறத்திரட்டு.1245)
  

இவை கண்டோர் கூற்று. 

பாக்கத்து  விரிச்சி - நிரைகோடற்கு எழுந்தோர்  போந்து  விட்ட
பாக்கத்துக்  கங்குலின்  நல்வாய்ப்புட்  கேட்டலும்,  நிரை  மீட்டற்கு
எழுந்தோர்     இடைப்புலத்துப்    புறம்போந்தோர்   கூறியவற்றை
வாய்ப்புள்ளாகக் கேட்டலும்;
 

உ-ம்:

‘‘திரைகவுள் வெள்வாய்த் திரிந்துவீழ் தாடி
நரைமுதியோ னின்றுரைத்த நற்சொ - னிரையன்றி
யெல்லைநீர் வைய மிறையோர்க் களிக்குமால்
வல்லைநீர் சென்மின் வழி’’
   
            (பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு.1239)  

‘‘வந்தநீர் காண்மினென் றாபெயர்ப்போர் மாட்டிசைத்த
பைந்தொடியார் கூறும் பறவாப்பு - ளுய்ந்த
 
 

‘‘நிரையளவைத் தன்றியு நீர்சூழ் கிடக்கை
வரைய