நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3912
Zoom In NormalZoom Out


நினைவன     வாகைக்கு வழுவாம்.  அகத்திற்கு  வழுவன்றென்றற்கு
மரபென்றார்.  ஏனைய  காலங்களாற் பாசறைப்  பெயர் இன்றென்றற்கு
இரண்டானும்   பெயர்   கூறினார்.   இங்ஙனங்  கூறவே  முற்கூறிய
துறைபோலத்  தொடர்  நிலைப்படுத்தலின்றாய்  இதனானே  பலவாகி
ஒருதுறைப்படுத்தலும் இன்றாயிற்று.
  

இனி  இருத்தற்பொருண் முல்லையென்பதே பற்றிப் பாசறைக் கண்
இருத்தலாற் பாசறைமுல்லையெனப் பெயர் கூறுவாரும் உளர்.
  

உ-ம்:  

‘‘மூதில்வாய்த் தங்கிய முல்லைசால் கற்புடைய
மாதர்பாற் பெற்ற வலியளவோ - கூதிரின்
வெங்கண் விறல்வேந்தன் பாசறையுள் வேனிலா
னைங்கணை தோற்ற வழிவு.’’
 
(பெரும்பொருள் விளக்கம். புறத்திரட்டு.1271. பாசறை 4)

எனவரும்,  

‘‘கவலை மறுகிற் கடுங்கண் மறவ
ருவலைசய் கூரை யொடுங்கத் - துவலைசெய்
கூதிர் நலியவு முள்ளான் கொடித்தேரான்
மூதின் மடவாண் முயக்கு’’        
(புறப். வெ.வாகை 15)

எனவும் வரும்.

ஏரோர் களவழி (த் தேரோர் தோற்றிய வென்றி) யன்றிக் களவழித்
தேரோர்    தோற்றிய     வென்றியும்     -     வேளாண்மாக்கள்
விளையுட்காலத்துக்  களத்துச் செய்யுஞ் செய்கைகளைத் தேரேறி வந்த
கிணைப்பொருநர்   முதலியோர்    போர்க்களத்தே    தோற்றுவித்த
வென்றியன்றிக்   களவழிச்   செய்கைகளை  மாறாது  தேரேறி  வந்த
புலவார் தோற்றுவித்த வென்றியாம்;
 

என்றது,  நெற்கதிரைக் கொன்று களத்திற் குவித்துப் போர் அழித்து,
அதரிதிரித்துச்    சுற்றத்தொடு    நுகர்வதற்கு    முன்னே   கடவுட்
பலிகொமுத்துப்  பின்னர்ப்  பரிசிலாளர் முகந்து கொள்ள வரிசையின்
அளிக்குமாறுபோல,  அரசனும்  நாற்படையையும்  கொன்று களத்திற்
குவித்து    எருது    களிறாக   வாள்மடல்   ஓச்சி   அதரிதிரித்துப்
பிணக்குவையை   நிணச்சேற்றொடு   உதிரப்   பேருலைக்கண்  ஏற்றி
ஈனாவேண்மாள்  இடந்துழந்தட்ட கூழ்ப்பலியைப் பலியாகக் கொடுத்து
எஞ்சிநின்ற யானை குதிரைகளையும் ஆண்டுப்பெற்றன பலவற்றையும்
பரிசிலர் முகந்துகொள்ளக் கொடுத்தலாம்.

உ-ம்:  

‘‘இருப்புமுகஞ் செறித்த வேந்தெழின் மருப்பிற்
கருங்கை யானை கொண்மூ வாக
நீண்மொழி மறவ ரெறிவன ருயர்த்த
வாண்மின் னாக வயங்குகடிப் படைந்த
குருதிப் பல்லிய முரசுமுழக் காக
வரசராப் பனிக்கு மணங்குறு பொழுதின்
வெவ்விசைப் புரவி வீசுவளி யாக
விசைப்பறு வல்வில் வீங்குநா ணுகைத்த
கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை
யீரச் செறுவிற் றேரே ராக
விடியல் புக்கு நெடிய நீட்டிநின்
செருப்படை மிளிர்ந்த திருத்துறு செஞ்சாற்
பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி
விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்
பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்
கான நரியொடு கழுதுகளம் படுப்பப்
பூதங் காப்பப் பொலிகளந் தழீஇப்
பாடுநர்க் கிருந்த பீடுடை யாள
தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி
வேய்வை காணா விருந்திற் போர்வை
யரிக்குரற் றடாரி யுருப்ப வொற்றிப்
பாடி வந்திசிற் பெரும பாடான்

றெழி