பெரும்பகை தாங்கும் வேலினானும் - போர்க்கணன்றியும் பெரியோராகிய பகைவரை அத்தொழிற்சிறப்பான் அஞ்சுவித்துத் தடுக்கும் வேற்றொழில் வன்மையானும்;
காத்தற்றொழிலன்றி அழித்தற்றொழில் பூண்ட முக்கட் கடவுட்குச் சூலவேல் படையாதலானும் முருகற்கு வேல் படையாதலானுஞ் சான்றோர் வேற்படையே சிறப்பப் பெரும் பான்மை கூறலானும் வேலைக் கூறி ஏனைப் படைகளெல்லாம்.
‘‘மொழிந்த பொருளோ டொன்ற வவ்வயின்
மொழியா ததனையு முட்டின்று முடித்தல்’’
(தொல். பொ. மர.110) என்னும் உத்தியாற் பெறவைத்தார். உ-ம்:
‘‘குன்று துகளாக்குங் கூர்ங்கணையான் வேலெறிந்
தன்று திருநெடுமா லாடினா - னென்றும்
பனிச்சென்று மூளாத பல்கதிரோன் சேயோ
டினிச்சென் றமர்பொரா யென்று’’ இது பாரதம்.
‘‘இரும்புமுகஞ் சிதைய நூறி யொன்னார்
அருஞ்சமங் கடத்த லேனோர்க்கு மெளிதே
நல்லரா வுறையும் புற்றம் போலவுங்
கொல்லேறு திரிதரு மன்றம் போலவும்
மாற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை
யுளனென வரூஉ மோரொளி
வலனுயர் நெடுவே லென்னைகண் ணதுவே’’
(புறம்.309) என்பதும் அது.
‘‘இவ்வே, பீலியணிந்து’’ என்னும் (95) புறப்பாட்டும்
அது
அரும்பகை தாங்கும் ஆற்றலானும் - வெலற்கரும் பகைவர்மிகையை நன்கு மதியாது எதிரேற்றுக்கொள்ளும்
அமைதியானும்; உ-ம்:
‘‘எருதுகா லுறாஅ திளைஞர் கொன்ற
சில்விளை வரகின் புல்லென் குப்பை
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாண ருண்டுகடை தப்பலி
னொக்க லொற்கஞ் சொலியத் தன்னூர்ச்
சிறுபுல் லாளர் முகத்தவை கூறி
வரகுகட னிரக்கு நெடுந்தகை
யரசுவரிற் றாங்கும் வல்லா ளன்னே’’
(புறம்.327) என வரும்.
‘‘களம்புக லோம்புமின்’’ என்னும் (87) புறப்பாட்டும் அது.
வாழ்க்கை புல்லா வல்லாண் பக்கமும் - உயிர்வாழ்க்கையைப் பொருந்தாத வலிய ஆண்பாலின் கூறுபாட்டானும்;
‘பக்க’மென்றதனாற் தாபதப்பக்கமல்லாத போர்த்தொழிலாகிய வல்லாண்மையே கொள்க. உ-ம்:
‘‘கலிவர லூழியின் வாழ்க்கை கடிந்து
மலிபுகழ் வேண்டு மனத்த - ரொலிகடல்சூழ்
மண்ணகலம் வேண்டாது வான்வேண்டி யீண்டினார்
புண்ணகலாப் போர்க்களத்துப் போந்து’’
(புறத்திரட்டு.1347.அமர்.3)
இப் பாரதத்துள் அது காண்க.
ஒல்லார்நாணப் பெரியவர்க் கண்ணிச் சொல்லிய வகையின் ஒன்றொடுபுணர்ந்து தொல்லுயிர் வழங்கிய அவிப்பலியானும் பகைவர் நாணும்படியாக உயர்ந்தோரான் நன்குமதித்தலைக் கருதி இன்னது செய்யேனாயின் இன்னது செய்வலெனத் தான் கூறிய பகுதி யிரண்டனுள் ஒன்றனோடே பொ
|