இது முற்கூறிய காஞ்சித்திணை வீடேதுவாகவன்றி வாளாது நிலையின்மை தோன்றக் கூறும்பகுதி கூறுகின்றது. இதுவும் வாகையைத் தொகுத்தோதிய பொதுச்சூத்திரம் போலத் துறை யொடும் படாது நிலையின்மைப் பொருளை வகுத்தோதிய சூத்திர மென்றுணர்க.
(இ-ள்.) மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமையும் - பிறராற்
றடுத்தற்கரிய கூற்றம் வருமெனச் சான்றோர் சாற்றிய பெருங் காஞ்சியானும்;
கூற்றாவது, வாழ்நாள் இடையறாது செல்லுங் காலத்தினைப் பெருள்வகையாற் கூறுபடுத்துங் கடவுள். அதனைப் பேரூர்க் கூற்றம் போலக் கொள்க. கூற்றத்திற்குக் காலமென்பது வேறன்மை யிற் ‘காலம் உலகம்’என (தொல். சொல். கிளவி.58) முன்னே கூறினார். உ-ம்:
‘‘பல்சான் றீரே பல்சான் றீரே
கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
பயனின் மூப்பிற் பல்சான் றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ
நல்லது செய்த லாற்றீ ராயினு
மல்லது செய்த லோம்புமி னதுதான்
எல்லாரு முவப்ப தன்றியும்
நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே’’
(புறம்.195) இது வீடேதுவாக வன்றி வீடுபேற்று நெறிக்கட் செல்லும் நெறியேதுவாகக் கூறியது.
‘‘இருங்கடலுடுத்த’’ என்னும் (369) புறப்பாட்டும்
அது.
கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் - இளமைத்தன்மை கழிந்து அறிவுமிக்கோர் இளமை கழியாத அறிவில் மாக்கட்குக் காட்டிய முதுகாஞ்சியானும்;
முதுமை மூப்பாதலான் அது காட்சிப்பொருளாக இளமை நிலையாமை கூறிற்றாம். உ-ம்:
‘‘இனிநினைந் திரக்க மாகின்று திணிமணற
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
தண்கய மாடு மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி
மறையென லறியா மாயமி லாயமொ
டுயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்த
நீர்நணிப் படுகோ டேறிச் சீர்மிகக்
கரையவர் மருளத் திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்து ம
|