நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3924
Zoom In NormalZoom Out


இரங்கிய கழிவு பொருட்கண் வந்த மன்னைக் காஞ்சியானும்;

இது    பலவற்றின்  நிலையாமை  கூறி  இரங்குதலின்  மன்னைக்
காஞ்சியென  வேறு  பெயர்  கொடுத்தார்.  இது பெரும்பான்மை மன்
என்னும்  இடைச்சொற்  பற்றியே வருமென்றற்கு ‘மன்’ கூறினார். இது
மன்னையெனத்  திரிந்து  காஞ்சியென்பதனோடடுத்து  நின்றது. இஃது
உடம்பொடு புணர்த்தல்.

‘‘சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே
சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே
பெருஞ்சோற் றானும் நனிபல கலத்தன் மன்னே
யென்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே
யம்பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்கு மன்னே’’
                                     
(புறம்.235)

என இப் புறப்பாட்டு மன் அடுத்து அப்பொருள் தந்தது.

‘‘பாடுநர்க் கீத்த பல்புக ழன்னே
யாடுநர்க் கீத்த பேரன் பினனே
யறவோர் புகழ்ந்த வாய்கோ லன்னே
திறவோர் புகழ்ந்த திண்ணன் பினனே
மகளிர் சாயன் மைந்தர்க்கு மைந்து
துகளறு கேள்வி யுயர்ந்தோர் புக்கில்
அனைய னென்னா தத்தக் கோனை
நினையாக் கூற்ற மின்னுயி ருய்த்தன்று
பைத லொக்கற் றழீஇ யதனை
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தலை யுலக மரந்தை தூங்கக்
கெடுவி னல்லிசை சூடி

நடுக லாயினன் புரவல னெனவே’’           
(புறம்.221)

இது மன் அடாது அப்பொருள்தந்தது.

‘‘செற்றன் றாயினும்’’ என்னும் (222)  புறப்பாட்டு  முதலியனவும்
அன்ன.

இதனை ஆண்பாற் கையறுநிலை யெனினும் அமையும்.

இன்னது     பிழைப்பின் இதுவாகியரெனத் துன்னருஞ்  சிறப்பின்
வஞ்சினத்தானும்     -    இத்தன்மைய    தொன்றனைச்    செய்த
லாற்றேனாயின்   இன்னவாறாகக்   கடவேனெனக்  கூறிய  வஞ்சினக்
காஞ்சியானும்;

அது     தான்  செய்யக்  கருதியது  பொய்த்துத்  தனக்கு  வருங்
குற்றத்தான்   உயிர்முதலியன  துறப்பெ  னென்றல்.  சிறப்பு  -  வீடு
பேறன்றி உலகியலிற் பெருஞ்சிறப்பு.

உ-ம்:

‘‘மெல்ல வந்தெ னல்லடி பொருந்தி
யீயென விரக்குவ ராயிற் சீருடை
முரசுகெழு தாயத் தரசோ தஞ்ச
மின்னுயி ராயினுங் கொடுக்குவெ னிந்நிலத்
தாற்ற லுடையோ ராற்றல் போற்றாதென்
னுள்ள மெள்ளிய மடவோன் றெள்ளிதிற்
றுஞ்சுபுலி யிடறிய சிதடன் போல
வுய்ந்தனன் பெயர்தலோ வரிதே மைந்