ன் அறநிலையின்மை அமையுமென்ப. உ-ம்:
‘‘அளிய தாமே சிறுவெள் ளாம்பல்
இளைய மாகத் தழையா யினவே
யினியே,
பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத்
தின்னா வைக லுண்ணும்
அல்லிப் படூஉம் புல்லா யினவே’’
(புறம்.248) என வரும்.
நல்லோள் கணவனொடு நனியழற் புகீஇச் சொல்லிடையிட்ட பாலைநிலையும் - கற்புடைய மனைவி தன் கணவன் இறந்துபட அவனோடு எரிபுகுதல் வேண்டி எரியை விலக்கினாரோடு உறழ்ந்து கூறிய புறங்காட்டு நிலையானும்;
எல்லாநிலத்தும் உளதாகித் தனக்கு வேறு நிலனின்றி வருதலானும் நண்பகல்போல் வெங்கனலான் வெதுப்புதலானும் புறங்காட்டைப் ‘பாலை’ யென்றார்; பாலைத்தன்மை எய்திற்று என்றற்கு ‘நிலை’யென்றார். உ-ம்:
‘‘பல்சான் றீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே
யணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் தட்ட
காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டாது
அடகிடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட
வேளை வெந்தை வல்சி யாகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியு
முயவற் பெண்டிரே மல்லே மாதோ
பெருங்கோட்டுப் பண்ணிய கருங்கோட் டீமம்
நுமக்கரி தாகுக தில்ல வெமக்கெம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற
வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்மையுந் தீயுமோ ரற்றே’’
(புறம்.246)
என வரும். மாய்பெருஞ் சிறப்பிற் புதல்வன் பெயரத் தாய் தப வரூஉம் தலைப்பெயல் நிலையும். பொருகளத்துப் பொருது மாயும் பெருஞ் சிறப்பிற் றீர்ந்து தன்மகன் புறங்கொடுத்துப் போந்தானாக, அது கேட்டுத் தாய் சாக்காடு துணிந்து சென்று மகனைக் கூடுங் கூட்டமொன்றானும்; இனி அவன் பிறர்சிறப்பு மாய்தற்குக் காரணமாகிய பெருஞ்சிறப்பொடு களப்பட்டுத் துறக்கத்துப் போயவழி அவனோடு இறந்துபட வரும் தாயது தலைப் பெயனிலைமையொன்றானும்;
‘இவ் விருகூறும் உய்த்துக்கொண்டுணர்த லென்னும் உத்தி. ‘நிலை’யென்றதனான் அவள் இறந்துபடாது மீடலுஞ் சிறுபான்மை யாம் காஞ்சி யென்று கொள்க. அஃது அன்பிற்கு நிலையின்மையாம். உ-ம்:
‘‘வாதுவல் வயிறே வாதுவல் வயிறே
நோவே னத்தை நின்னீன் றனனே
பொருந்தா மன்ன ரருஞ்சம முருக்கி
யக்களத் தொழிதல் செல்லாய் மிக்க
புகர்முகக் குஞ்சர மெறிந்த வெஃகம்
அதன்முகத் தொழிய நீபோந் தனையே
“த
|